• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈரான் போர் விவகாரத்தால் ட்ரம்ப் எடுத்துள்ள முக்கிய தீர்மானம் - மீளப்பெறப்படும் அமெரிக்கப் படையினர்

ஜேர்மனியிலிருந்து 5,000 துருப்புகளை மீளப்பெற அமெரிக்க பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது.

ஈரான் உடனான போர் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜேர்மன் ஜனாதிபதி பிரீட்ரிக் மெர்ஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதலுக்கு மத்தியில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஈரானிய பேச்சுவார்த்தையாளர்களால் அமெரிக்கா அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக மெர்ஸ் குறிப்பிட்டதையடுத்து, அவரை ட்ரம்ப் விமர்சித்த மறுநாளே இந்த முடிவு வெளியாகியுள்ளது.

குடிவரவு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மெர்ஸ் மிக மோசமாகச் செயல்படுகிறார் என ட்ரம்ப் தமது சமூக வலைத்தள கணக்கில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் இத்தாலி மற்றும் ஸ்பெயினிலிருந்தும் அமெரிக்க துருப்புகளை மீளப்பெறுவது குறித்து ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி, ஜேர்மனி முழுவதும் உள்ள தளங்களில் 36,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படையினர் பணியாற்றி வருகின்றனர்.

பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்தின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பென்டகன் ஊடகப்பேச்சாளர் சீன் பார்னெல் தெரிவித்துள்ளார்.

இந்த துருப்புக்கள் வெளியேற்றம் அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேட்டோ கூட்டணியை நீண்டகாலமாக விமர்சித்து வரும் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளில் ஒத்துழைக்க மறுக்கும் நட்பு நாடுகள் மீது தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்.

ஈரான் போரில் உதவி செய்யாததற்காக இத்தாலி மற்றும் ஸ்பெயினையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  
 

Leave a Reply