நியூயோர்க் நகரில் பயங்கரம் - வீதியில் தாயுடன் சென்ற 7 மாத குழந்தை துப்பாக்கிச்சூட்டில் பலி
இலங்கை
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கிழக்கு வில்லியம்ஸ்பர்க் பகுதியில் புதன்கிழமை (1) மதியம் 1.15 மணியளவில் வீதியில் சென்ற குழந்தை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தனது தாயுடன் 7 மாதக் குழந்தை ஸ்டிராலரில் வைத்து அழைத்துச் செல்லப்பட்டபோது, மோபெட் வாகனத்தில் வந்த இருவர் கூட்டத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அந்தக் குழந்தையின் தலையில் தோட்டா பாய்ந்து, சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பான சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. CCTV காட்சிகளில் , ஒரு ஸ்கூட்டரில் இருவர் வேகமாக வருவதும், பின்னால் அமர்ந்திருப்பவர் திடீரெனத் துப்பாக்கியை எடுத்து கூட்டத்தை நோக்கிச் சுடுவதும் பதிவாகியுள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு அவர்கள் இருவரும் அதே வாகனத்தில் தப்பியோடினர். இதற்கிடையில், படுகாயமடைந்த குழந்தையை அவனது தந்தை அலறியபடி கையில் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள வுட்ஹல் மருத்துவமனைக்கு ஓடினார்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தத் தாக்குதல் ஒரு கும்பல் மோதலின் பின்னணியில் நடந்திருக்கலாம் என நியூயோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில், இலக்கு வைக்கப்பட்ட நபர்களைச் சுட முயன்றபோது, தவறுதலாகக் குழந்தை மீது தோட்டா பாய்ந்ததாகத் தெரிகிறது. தப்பியோடிய இருவரில் ஒருவர் தற்போது காவல்துறையினரால் பிடிபட்டுள்ளதாகவும், மற்றொருவரைத் தீவிரமாகத் தேடி வருவதாகவும் நியூயோர்க் மேயர் ஜோஹ்ரான் மம்தாணி தெரிவித்துள்ளார்.























