பாவனாவின் அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத் - வெளியீட்டு தேதி அறிவிப்பு
சினிமா
இந்திய திரையுலகில் 23 ஆண்டுகளாக தனது நடிப்பு திறமையாலும், விடாமுயற்சியாலும் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்தவர் பாவனா. பல்வேறு திரைப்படங்கள், பிரபல நடிகர்களுடன் பணியாற்றி இருக்கும் பாவனா தனது 90வது மைல்கல் திரைப்படமான 'அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்' மூலம் மீண்டும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்த உள்ளார்.
'நம்மல்' திரைப்படம் மூலம் அறிமுகமான பாவனா, இதுவரை பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வரிசையில், `அனோமி' படத்தில் அவர் புது கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடித்துள்ளார். இந்த திரில்லர் படத்தை அறிமுக இயக்குநர் ரியாஸ் மரத் எழுதி இயக்கியுள்ளார்.
வழக்கமான குற்றவியல் திரில்லர் எல்லைகளைத் தாண்டி, பேரலெல் இன்வெஸ்டிகேஷன் எனும் தனித்துவமான கதை சொல்லும் முறையில், உணர்ச்சிகளும் பதற்றமும் கலந்த திரைக்கதையை அமைந்துள்ளார். படத்தில் பாவனா, 'சாரா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உணர்ச்சி ஆழமும், புத்திசாலித்தனமும் கொண்ட ஒரு தடயவியல் நிபுணராக அவரது நடிப்பு முக்கிய களமாக இருக்கும்.
மேலும் நடிகர் ரஹ்மான், இந்தப் படத்தில் விசாரணை அதிகாரியாக மலையாள சினிமாவுக்கு மீண்டும் திரும்புகிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு முக்கிய பலமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் பினு பப்பு, விஷ்ணு அகஸ்த்யா, அர்ஜுன் லால், ஷெபின் பென்சன் மற்றும் த்ரிஷ்யா ரகுநாத் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை டி சீரிஸ் ஃபிலிம் மற்றும் பனோரமா ஸ்டூடியோஸ் வழங்க குமார் மங்கத் பாதக் மற்றும் அபிஷேக் பாதக் தயாரித்துள்ளனர். ராஜேஷ் மேனன், ராம் மிர்சந்தானி, நிதின் குமார் மற்றும் மன்சூத் டி.பி. இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தை ப்ளிட்ஸ்கெர்க் ஃபிலிம்ஸ் (Blitzkrieg Films), ஏபிகே சினிமா (APK Cinema) மற்றும் நடிகை பாவனாவின் சொந்த நிறுவனமான பாவனா ஃபிலிம் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.
'அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்' மர்மம், உணர்ச்சி, மற்றும் புத்திசாலித்தனமான விசாரணை ஆகியவற்றின் சங்கமமாக, ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது. இப்படம் திரையரங்குகளில் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக உள்ளது.






















