• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மன்னாரில் வீதி அமைக்க கோரிய நபருக்கும் , நகர சபை தலைவருக்கும் இடையில் கைகலப்பு

இலங்கை

மன்னார் நகர சபைக்கு சொந்தமான எமில் நகர்  எல்லையில் உள்ள பாத்திமா புறத்தில் நகர சபைக்கு சொந்தமான வீதிகளில் கிரவல் பரப்பும் நடவடிக்கை இடம் பெற்று வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தங்கள் பகுதி வீதியையும் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

சம்பந்தப்பட்ட நபர் தொடர்ச்சியாக வீதி யை அமைத்து தர கோரி பலமுறை நகரசபை தலைவரிடம் முன்னதாகவே கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த  நிலையில் நேற்றுவீதியை அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்த மன்னார் நகரசபை தலைவரிடம் நேரடியாக நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும் எங்கள் பகுதி வீதியை அமைக்காது தனிப்பட்ட நபர் ஒருவருக்காக  இந்த வீதியை அமைக்க முன்னிற்பது சரியா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில் இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் குறித்த நபரை அவ்விடத்தில் இருந்து வெளியேறுமாறு நகரசபை தலைவர் தெரிவிக்க அவர் வெளியேற மறுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து நகரசபை தலைவர் குறித்த நபரை தள்ளி விட்டு அவர் மீது தாக்குதல் நடத்தியதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து இருவரும் மாறி மாறி தாக்கிக்கொண்ட நிலையில் பரஸ்பரம் கற்களாலும் எரிந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் அதிக அளவு தாக்குதலுக்கு  உள்ளான எமில் நகரை சேர்ந்த நபர் காயங்களுடன்   வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சண்டையின் போது கற்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது அங்கே இருந்த நகர சபை பெண் உறுப்பினர் மீது கற்கள் எறியப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பெண் உறுப்பினரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply