• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் சினிமா வரலாற்றில் கவிஞர் என்றவுடன் அனைவருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வருவது கவிஞர் கண்ணதாசனே

சினிமா

தமிழ் சினிமா வரலாற்றில் கவிஞர் என்றவுடன் அனைவருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வருவது கவிஞர் கண்ணதாசனே. தமிழ் மொழியை மிகவும் எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்த்த கவிஞர் கண்ணதாசன் 4000 கவிதைகள் 5000 திரை இசை பாடல்களுக்கும் மேலாக எழுதியுள்ளார். தமிழக அரசின் அரசவை கவிஞராக இருந்து அலங்கரித்த கவிஞர் கண்ணதாசனைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்!

கவிதை எழுதுவதில் தீவிர ஆர்வம் கொண்ட கண்ணதாசன் சென்னைக்கு வந்ததும் அவர் எழுதிய முதல் பாடல் 1949 ஆம் ஆண்டு வெளியான கன்னியின் காதலி என்ற படத்தில் இடம்பெற்ற 'கலங்காதிரு மனமே' என்ற பாடல். இந்தப் பாடல் எழுதியதில் தொடங்கிய இவரது பயணம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஆளுமையாக இவரை அமரச் செய்தது.

எப்போதும் பாடல்களை எழுதும்போது கவிஞர் கண்ணதாசன் நடந்து கொண்டே கவிதைகளை சொல்லிக்கொண்டே இருப்பாராம். நடந்து கொண்டே இருந்தால் தான் சிந்தனை பிறக்கும் என்பதால் இவர் எழுதிய பெரும்பாலான பாடல்கள் வேட்டியின் நுனியை பிடித்தபடியே நடந்து கொண்டே எழுதியவை தானாம். அவ்வாறு பாடல்கள், கவிதைகளை எழுதும் போது எப்போதும் கால்களில் காலணி அணிய மாட்டாராம். செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கு ஏற்ப கவிதைக்கு செய்யும் மரியாதையாகவே இதனை கருதியதால் தன் வாழ்நாள் முழுவதும் எழுதும்போது காலணி அணியாமல் இருப்பதை தொடர்ந்து வந்திருக்கிறார்.

கண்ணதாசன் மிகவும் நேசித்த இலக்கியம் என்றால் அது கம்பராமாயணம் தான். ஏனெனில் தான் கவிதை இயற்றும் சக்தியை இந்த இலக்கியத்தில் இருந்து தான் பெற்றதாகவும் இதுதான் தனக்கு பிடித்த இலக்கியம் என்றும் கூறுவாராம். கம்பரையும், பாரதியாரையும் மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட கண்ணதாசன் அவர்களுடைய எழுத்துக்களை பாமரனுக்கும் புரியும் வகையில் எளிமையாக்கம் செய்து தனது பாடல்களில் பயன்படுத்தி இருப்பார். காமராசரோடு நெருங்கிய நட்பு கொண்டிருந்த கவிஞர் கண்ணதாசன் அவரது வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் அது அவரது காலத்தில் நடக்காமல் போய்விட்டது.

தான் வாழ்ந்த காலத்தில் பிறப்பு முதல் வாழும் காலம் வரை வரும் அனைத்து சூழல்களையும் தன்னுடைய பாடல்களில் எழுதிய கவியரசர் கண்ணதாசன் இறப்பு, இறப்புக்கு பின் செய்யப்படும் இறுதிச்சடங்கு போன்றவற்றையும் விட்டு வைக்காமல் தனது பாடல்களில் எழுத்துக்களாய் வடிவமைத்துச் சென்றார். அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது, எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பது தான்! என தன்னுடைய அனுபவம் முழுவதையும் தன்னுடைய வரிகளில் வடிவமைத்தவர் கண்ணதாசன்.

தன்னுடைய நண்பர்களிடம் எப்பொழுதும் ஏதாவது குறும்புத்தனம் செய்து கொண்டே இருப்பாராம் கண்ணதாசன். அப்படி ஒரு முறை தனது நண்பர்களுக்கு போன் செய்து கண்ணதாசன் இறந்து விட்டதாக கூறிவிட்டாராம். உடனே அனைவரும் அழுது கொண்டே வீடு தேடி வர அவர்கள் அனைவரையும் கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்தாராம் கண்ணதாசன். ஒரு காலகட்டத்தில் சினிமாவுக்கு பாட்டு எழுதியது போதும் என நினைத்த கண்ணதாசன் கடைசியாக MSV க்கு ஒரு பாட்டு எழுதிக் கொடுத்து விட்டு, இதுதான் என்னுடைய கடைசி பாட்டு என்று கூறினாராம். ஆனால் அதற்குப் பின்பு

இளையராஜாவும், பாலு மகேந்திராவும் தாங்கள் எடுக்கும் ஒரு படத்திற்கு அவசரமாக ஒரு பாடல் எழுதி தர வேண்டும் என்று கேட்கவே மூன்றாம் பிறை திரைப்படத்தில் இடம் பெற்ற 'கண்ணை கலைமானே' என்ற பாடலை எழுதிக் கொடுத்து விட்டு இதுதான் என்னுடைய கடைசி பாடல் என்று கூறிவிட்டாராம். அதன் பிறகு கவியரசர் கண்ணதாசன் பாடலே எழுதவில்லை.

வாழ்க்கைக்கு தேவையான நெறிமுறைகளை கடைகோடி மனிதர்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் திரை இசை பாடல்களுக்கு ஒரு மிகப்பெரிய பங்கு உண்டு. இதனை கருதியே தன்னுடைய பெரும்பாலான எழுத்துக்களில் இலக்கியங்களை மிகவும் எளிமைப்படுத்தி தன்னுடைய பாடல்களில் பயன்படுத்தியிருப்பார் கண்ணதாசன். இப்படி வாழ்வின் ஒவ்வொரு சூழலிலும் மனிதர்களுக்கு தேவையான தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு பாடல்கள் எழுதப்பட்டதால் தான் கண்ணதாசனின் வரிகள் காலம் கடந்தும் நம் நினைவுகளில் புரளுகின்றன.
 

Leave a Reply