கொட்டாவி விட்டதால் திறந்த வாயை மூட முடியாமல் தவித்த வாலிபர்- ஓடும் ரெயிலில் பரபரப்பு
இலங்கை
உடல் சோர்வு, தூக்க கலக்கம் உள்ளிட்ட காரணங்களால் ஒருவருக்கு கொட்டாவி வருவது இயல்புதான். ஆனால் அந்த கொட்டாவியே ஒருவருக்கு, தான் அனுபவிக்கும் கஷ்டத்தை வாயால் சொல்ல முடியாத அளவுக்கு திறந்த வாயை மூடமுடியாத திடீர் சோகத்தை தந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
கன்னியாகுமரி-அசாம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாலிபர் ஒருவர் பயணித்தார். பாலக்காடு ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்து நின்றபோது அந்த வாலிபர் வழக்கம்போல் கொட்டாவி விட்டார். ஆனால் கொட்டாவி விட்ட கண்ணிமைக்கும் நொடியில் அவரால் மீண்டும் வாயை மூடி இயல்பு நிலைக்கு வர முடியாமல் கடும் சிரமப்பட்டார். மேலும் தான் அனுபவிக்கும் கஷ்டத்தை கூட அவரால் வாயால் பேசி சொல்ல முடியவில்லை. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள், ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பாலக்காடு ரெயில்வே மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி பி.எஸ்.ஜிதன் விரைந்து வந்து, சம்பந்தப்பட்ட வாலிபருக்கு உடனடி சிகிச்சை அளித்தார். இதையடுத்து அந்த வாலிபர் வாய் மூடி பேசிய நிலையில் இயல்பு நிலைக்கு திரும்பினார். தொடர்ந்து அதேரெயிலில் அந்த வாலிபர் பயணம் செய்து தனது ஊருக்கு திரும்பினார்.
இதுகுறித்து மருத்துவ அதிகாரி கூறுகையில்,
'வாலிபருக்கு கொட்டாவி விடும்போது வாய் மீண்டும் மூட முடியாமல் போன நிலைக்கு ''டெம்பரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்லொகேஷன் எனப்படுவது ஆகும். அதாவது தாடை எலும்பு சுழற்சி சிக்கல் என்று பெயர். கீழ்தாடை எலும்பின் பந்துபூட்டு இயல்பான இடத்தில் இருந்து நகர்ந்து விடும் நிலையே இது. இதனால் கொட்டாவி விடும்போது வாய் திறந்த நிலையிலேயே முடங்கி விடும். இதன்காரணமாக வலி, பேசவும், வாய் மூடவும் சிரமம் ஏற்படும். அதிகமாக கொட்டாவி விட்டாலும், விபத்துகள் அல்லது சில நோய்களாலும் இது ஏற்படலாம். டாக்டரிடம் சிகிச்சை பெற்றால் மீண்டும் இயல்பான நிலைக்கு மாற்ற முடியும். ஆனால் சில நேரங்களில் அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்' என்றார்.























