
அமெரிக்கா உடனான கனிம ஒப்பந்தத்திற்கு உக்ரைன் பாராளுமன்றம் ஒப்புதல்
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி படையெடுத்தது. முதலில் உக்ரைன் பின்வாங்கிய நிலையில் ரஷியா ஏராளமான பகுதிகளை பிடித்தது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆதரவுடன் உக்ரைன் பதிலடி கொடுத்து பல பகுதிகளை மீட்டது. மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து 4ஆவது வருடமாக இரு நாடுகளுக்கும் இடையில் போர் நடைபெற்று வருகிறது.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். அமெரிக்கா உக்ரைன் மற்றும் ரஷியா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையே உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களை எடுத்துக் கொள்ள உக்ரைனுடன் ஒப்பந்தும் போட்டுக்கொள்ள டிரம்ப் விரும்பினார். முதலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்னர் ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்கான வாக்கெடுப்பு உக்ரைன் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ஒருமனதாக ஒப்பந்தத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. வாக்கெடுப்பு வெற்றிபெற 226 வாக்குகள் தேவை என்ற நிலையில், 338 வாக்குகள் ஆதரவாக விழுந்தன. எந்தவொரு உறுப்பினரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை அல்லது புறக்கணிக்கவில்லை என உக்ரைன் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.