
சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்ட நாமல்
இலங்கை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (25) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய விமானப் படையணியை மாற்றியமைக்கும் போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொது நிறுவன அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் சில அறிக்கைகள் வெளிப்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.