ராம் சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது!- சர்ச்சையில் சிரஞ்சீவி
சினிமா
தெலுங்கில் அப்பா சிரஞ்சீவியை தொடர்ந்து கதாநாயகனாக களமிறங்கி கலக்கி கொண்டிருப்பவர் மகன் ராம் சரண். ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த 'RRR' திரைப்படம், ராம் சரணை பான் இந்தியா ஸ்டாராக மாற்றிய நிலையில், உலக அளவில் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் உருவானது.
கடந்த 2012-ம் ஆண்டு, நடிகர் ராம் சரண் அப்பல்லோ மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பிரதாப் ரெட்டியின் பேத்தியான உபாசனா காமினேனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சுமார் 10 ஆண்டுகள், குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை இருவருமே தள்ளி போட்டனர். அதே நேரம் உப்பாசனா மருத்துவ துறையில் இருப்பதால், தன்னுடைய கருமுட்டையை சேமித்து வைத்தார். இதை வைத்தே சுமார் 10- ஆண்டுகளுக்கு பின்னர் இவர் கருத்தரித்து க்ளின் காரா என்கிற மகளை பெற்றெடுத்தார்.
இந்த நிலையில், 'பிரம்மானந்தம்' என்ற திரைப்பட வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
"என் மகன் ராம்சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என பயமாக உள்ளது. நான் வீட்டில் இருக்கும்போது, என்னைச் சுற்றி என் பேத்திகள் இருப்பது போல் உணர முடியவில்லை. ஏதோ லேடீஸ் ஹாஸ்டலில் வார்டனாக இருப்பது போல உணர்கிறேன். குடும்பத்தின் மரபை தொடரும் வகையில் இந்த முறையாவது ராம் சரணுக்கு ஆண் குழந்தை கிடைக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
சிரஞ்சீவியின் இந்த பேச்சுக்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.























