நெருக்கடி ஏற்படுவதை தவிர்ப்பதற்கே வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டது – ஜனாதிபதி
இலங்கை
நாட்டில் மற்றுமொரு நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கிலேயே இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குருணாகல் – கல்கமுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்குப் பல வருடங்களின் பின்னர் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் இது மிகவும் நுட்பமாகவும் கவனமாகவும் செய்யப்பட வேண்டியதொரு செயற்பாடாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது, வாகனங்களின் விலை அதிகரித்தாலும், சில நாட்கள் செல்லும்போது அதனைக் குறைப்பதற்கும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் வாகன இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியிலும் சிலர் சட்டவிரோதமாக வாகனங்களை இறக்குமதி செய்து பயன்படுத்தியுள்ளனர் எனவும், அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படுவார்கள் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.