காரைதீவு, மாளிகைக்காடு பிரதேச கடலரிப்பு பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதில் பாராமுகம்
இலங்கை
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் அண்மைக்காலமாக கடலரிப்பு தீவிரமடைந்து வருவதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ்.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்ட பின்னரே அம்பாறை மாவட்டத்தின் பல கரையோரப் பகுதிகளில் கடலரிப்பு வேகமடைந்துள்ளதாக பரவலாகக் கருத்து நிலவிவரும் நிலையில் கடலரிப்பைத் தடுக்கும் நடவடிக்கைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக அவர் சந்தேகம் வெளியிட்டார்.
குறிப்பாக காரைதீவு கடற்கரையில் கடலரிப்பைத் தடுக்கும் நோக்கில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் பெருமளவிலான பாறாங்கற்கள் குவிக்கப்பட்ட போதிலும் அவை இதுவரை கடலுக்குள் இடப்படவோ அல்லது கல்லணை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவோ இல்லை என அவர் சுட்டிக்காட்டினார். மேலும் இந்து மயானமும் மாளிகைக்காடு மையவாடிம் கடலரிப்பில் காவு கொள்ளப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை நிந்தவூர் சாய்ந்தமருது மற்றும் கல்முனை உள்ளிட்ட அயல்பகுதிகளில் கடலரிப்பைத் தடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு பாறாங்கற்கள் கடலில் இடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இவ்வாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் தாம் இப்பிரச்சினையை முன்வைத்ததாக தவிசாளர் குறிப்பிட்டார். எனினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டார்.
மேலும் அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவாவிடமும் பல தடவைகள் இப்பிரச்சினை எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அண்மையில் ஜனாதிபதி அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தபோதும் காரைதீவு கடலரிப்பு பிரச்சினை தொடர்பில் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாக அவர் கூறினார். இருப்பினும்இ கடற்கரையில் குவிக்கப்பட்டுள்ள பாறாங்கற்கள் இன்னமும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் கிடப்பில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில் காரைதீவு கடற்கரை நாளுக்கு நாள் கடலால் அரிக்கப்பட்டு வருவதால் கரையோர மக்களின் வாழ்வாதாரமும் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாகவும் பல குடும்பங்கள் நிரந்தர அச்சத்துடனும் கவலையுடனும் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை மாளிகைக்காடு மையவாடி பகுதியும் கடலரிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடலரிப்பினால் மையவாடி முழுமையாக காவுகொள்ளப்பட்ட நிலையில் அதனை சீரமைப்பதற்காக மண் நிரப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுமார் எட்டு மாதங்களுக்கு முன்னர் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும்இ இதுவரை அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.
இதன் காரணமாக மாளிகைக்காடு பகுதி மக்கள் தங்களது ஜனாஸாக்களை சொந்த மையவாடியில் நல்லடக்கம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதுடன் அண்மைய கிராமங்களின் மையவாடிகளை நாட வேண்டிய அவலநிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனவே காரைதீவு கடற்கரை பாதுகாப்பு திட்டம் குவிக்கப்பட்டுள்ள பாறாங்கற்களை உடனடியாக கடலுக்குள் இடுதல் கல்லணை அமைத்தல் மற்றும் மாளிகைக்காடு மையவாடி சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களில் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் திணைக்களங்கள் மற்றும் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நிரந்தர தீர்வை வழங்க வேண்டும் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரனும் பிரதேச மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.





















