• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மொத்தம் 1,399 நிலநடுக்கங்களுக்கு காரணமான வட கொரியாவின் அணு ஆயுதச் சோதனைகள்

Nuclear Tests May Have Triggered 1,399 Earthquakes: அணு ஆயுதச் சோதனைகள் 1,399 நிலநடுக்கங்களைத் தூண்டியிருக்கலாம்.

வட கொரியாவின் அணு ஆயுதச் சோதனைகள், அதன் முக்கிய அணு ஆயுதச் சோதனைத் தளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கங்களின் அதிகரிப்பைத் தூண்டியிருக்கலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

2017-இல் வட கொரியா நடத்திய கடைசிச் சோதனைக்குப் பிறகும் இந்தச் செயல்பாடுகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கங்களின் நிகழ்வெண்ணும் தீவிரமும் காலப்போக்கில் அதிகரித்து வருவதாகவும் புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

கடந்த 2,000 ஆண்டுகளாக வட கொரியாவின் மந்தாப் மலையும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியும் அமைதியாக இருந்து, எந்த நிலநடுக்கங்களும் அப்பகுதியில் பதிவு செய்யப்பட்டதில்லை.

இந்த நிலையில், விஞ்ஞானிகள் 2008 முதல் 2025 வரையிலான நில அதிர்வுத் தரவுகளை ஆய்வுசெய்து, அந்த மலையைச் சுற்றி 1,399 நிலநடுக்கங்களைக் கண்டறிந்துள்ளனர்.

இந்த மலையில்தான் வட கொரியா 2006 முதல் 2017 வரை ஆறு நிலத்தடி அணு சோதனைகளை நடத்தியது. இந்தக் கண்டுபிடிப்புகள் வழக்கத்திற்கு மாறானவை; ஏனெனில், அணுசக்தி வெடிப்புகளுடன் தொடர்புடைய நிலநடுக்கங்கள் பொதுவாக ஒரு சோதனைக்குப் பிறகு பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து அதிகரிப்பதில்லை.

வட கொரியாவின் மூன்றாவது அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு, 2013-ல் அப்பகுதியில் முதல் நிலநடுக்கம் பதிவானது. ஆனால், அதனைத் தொடர்ந்த ஆண்டுகளில் மிகக் குறைவான நிலநடுக்கங்களே ஏற்பட்டன.

2017-இல் வட கொரியா தனது ஆறாவது மற்றும் மிகப்பெரிய அணு ஆயுதச் சோதனையை மேற்கொண்ட பிறகு நிலைமை மாறியது.

நிலநடுக்கங்களின் அதிர்வெண் மற்றும் தீவிரத்தைக் குறிக்கும் நிலநடுக்கச் செயல்பாடு 2017-ஆம் ஆண்டு வரை குறைவாகவே இருந்ததாகவும், ஆனால் ஆறாவதும் மிகப்பெரியதுமான அணு ஆயுதச் சோதனையை மேற்கொண்ட பிறகு அச்செயல்பாடு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்ததாகவும் ஆய்வின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

2017-இல் நடத்தப்பட்ட சோதனையானது 6.3 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கத்தை ஏற்படுத்தியது. இது சுரங்கப்பாதை இடிந்து விழுவதற்கும், மலை உச்சியின் வடிவத்தை சுமார் 3 மீற்றர் அளவிற்கு மாற்றுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.

சோதனைகளுக்குப் பிறகு பதிவான நிலநடுக்கங்கள் குறிப்பிடத்தக்க அளவு வலிமையானவையாக இருக்கவில்லை. வட கொரியா தனது அணு சோதனைகளைத் தொடங்குவதற்கு முன்பு, அப்பகுதியில் நில அதிர்வு செயல்பாடு மிகக் குறைவாகவே இருந்தது என்பதும் அறியப்பட்டிருந்தது.

2017-ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சோதனைக்குப் பிறகு, மந்தாப் மலைக்குக் கீழே உள்ள தரை அதன் முந்தைய நிலைக்குத் திரும்பவில்லை என்பதையே நிலநடுக்கங்களின் அதிகரிப்பு உணர்த்தக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இந்த வெடிப்பு, மலைக்குள் இருந்த பழைய மற்றும் செயலற்ற நிலையில் இருந்த விரிசல்களை மீண்டும் செயல்பட வைத்துள்ளது. மேலும், வெடிப்பினால் பாறைகளில் உருவான புதிய விரிசல்கள் நீரால் நிரம்பியுள்ளன.

இந்த நுண்துளை அழுத்தத்தால் பாறைகள் ஒன்றோடொன்று சரியும், இதன் விளைவாகத் தொடர்ச்சியாகச் சிறிய நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன என்றே பூசான் தேசியப் பல்கலைக்கழகத்தின் புவியியல் அறிவியல் துறையின் பேராசிரியரான கிம் விளக்கமளிக்கிறார்.
 

Leave a Reply