மொனராகலையில் 7 கோடி ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு - ஒன்றரை ஏக்கர் கஞ்சாத் தோட்டமும் அழிப்பு
இலங்கை
மொனராகலை, ஹம்பேகமுவ – கோமகல வீதியின் மூலையில் உள்ள மௌர கால்வாய் கரைக்கு அருகில் வாலான ஊழல் ஒழிப்புப் பிரிவினர் நடத்திய விசேட சுற்றிவளைப்பின் போது, விற்பனைக்காகத் தயார் செய்யப்பட்டிருந்த பாரிய கஞ்சா பொதியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து 1,044 கிலோகிராம் மற்றும் 180 கிராம் எடையுள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா கையிருப்பின் சந்தைப் பெறுமதி சுமார் 7 கோடியே 37 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா எனப் பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, அதே பகுதியில் சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் இரகசியமாகப் பயிரிடப்பட்டிருந்த கஞ்சாத் தோட்டமொன்றை முற்றுகையிட்ட பொலிஸார், அங்கிருந்த 54,096 கஞ்சா மரங்களை அழித்ததுடன் மற்றொரு சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர். வாலான ஊழல் ஒழிப்புப் படைப் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல மற்றும் அதன் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இச்சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாகச் முன்னெடுக்கப்பட்டுள்ளன.





















