இலங்கைக்கு கடத்தவிருந்த 120 பந்தய புறாக்கள் கியூ பிரிவு பொலிசாரால் பறிமுதல்
இலங்கை
தமிழகத்தின் – பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் எடுத்துவரப்பட்ட 120 பந்தய புறாக்களை காருடன் பறிமுதல் செய்த க்யூ பிரிவு பொலிஸார் காரில் இருந்த மதுரையைச் சேர்ந்த இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கைபயணம்
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கும் மிக அருகில் இருப்பதால் மண்டபம், மரைக்காயர் பட்டினம், வேதாளை, பாம்பன், குந்துகால், தனுஷ்கோடி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டுப்படகில் சமையல் மஞ்சள், கடல் அட்டை, மெத்தப்பெட்டமன், கஞ்சா ஆயில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருவதுடன் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்கு கடல் வழியாக தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகள் கடத்தப்பட்டு வருகிறது.
இந்த கடத்தல் சம்பவங்களை தடுக்க இராமநாதபுரம் மாவட்டத்தில் கியூ பிரிவு,மத்திய, மாநில உளவுத்துறை, கடற்படை, கடலோர காவல் படை, சுங்கத்துறை, மரைன் பொலிஸ் என பாதுகாப்பு துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தாலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு பந்தய புறாக்கள் கடத்த இருப்பதாக கியூ பிரிவு ராமநாதபுரம் ஆய்வாளர் ஜீவமணிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று நள்ளிரவு கியூ பிரிவு பொலிஸார் பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகம் மற்றும் பாம்பன் பாலத்தில் மறைந்து இருந்து கண்காணித்து வந்தனர். இலங்கைபயணம்
இன்று அதிகாலை ராமேஸ்வரம் நோக்கி வந்த கார் ஒன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் பாம்பன் சாலை பாலத்தில் வெகு நேரமாக நின்று கொண்டு இருந்ததை கண்ட கியூ பிரிவு பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் சுற்றி வளைத்து காருக்கு அருகே நின்று கொண்டிருந்த இருவரிடம் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த கியூ பிரிவு பொலிஸார் காரை திறந்து சோதனை செய்தபோது காருக்குள் ஆறு இரும்பு குடைகளில் 120 புறாக்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து காருடன் பந்தைய புறாக்களை பறிமுதல் செய்த கியூ பிரிவு பொலிஸார் காரில் வந்த இருவரையும் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதனிடையே காரை கியூ பிரிவு பொலிஸார் புறாவுடன் பறிமுதல் செய்த பின் பாம்பன் வடக்கு கடற்கரையில் சோதனை செய்ய சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த நாட்டுப்படகு ஒன்று கியூ பிரிவு பொலிசாரை கண்டதும் அங்கிருந்து கடலுக்குள் தப்பி சென்றது.
இதை அடுத்து தப்பிச்சென்ற நாட்டுப் படகு குறித்து மரைன் பொலிசார் உதவியுடன் பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பிடிபட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில் பந்தய புறாக்கள் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த மதுரையில் இருந்து கொண்டுவரப்பட்டது என ஒப்புக்கொண்டனர். இலங்கைபயணம்
இலங்கைக்கு கடல் வழியாக பந்தய புறாக்கள் கடத்தப்பட்டு பிடிபட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.























