நடுவானில் தலைகீழாகச் சரிந்து விழுந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் - பிரிட்டிஷ் பயணிகள் வழக்கு
லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், நடுவானில் மியான்மர் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது (May 21, 2024) கடுமையான விபரீதத்தைச் சந்தித்த நிலையில், பிரிட்டிஷ் பயணிகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
விபத்து நடந்து (May 21, 2024) ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், இந்த விபத்தில் இருந்து தப்பிய பிராட்லி ரிச்சர்ட்ஸ், பெஞ்சமின் ரீட் மற்றும் அலிசன் ரீட் ஆகிய மூன்று பிரிட்டிஷ் பயணிகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் (UK High Court) இழப்பீடு கோரி அதிகாரப்பூர்வமாக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான எஸ்கியூ321 (SQ321) என்ற போயிங் விமானம், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட திடீர் காற்றுச் சுழற்சி (Clear-Air Turbulence) காரணமாக, அந்த விமானம் வெறும் 4 வினாடிகளில் சுமார் 178 அடி ஆழத்திற்குத் தலைகீழாகச் சரிந்து விழுந்தது.
இந்த கோரமான வான்வழி விபத்தில், விமானத்தின் சீட்பெல்ட் அணியாமல் இருந்த பயணிகள் அனைவரும் தூக்கி வீசப்பட்டு, மேல் கூரையில் பலமாக மோதி படுகாயமடைந்தனர்.
இந்த பயங்கரமான இக்கட்டான சூழலில், தனது மனைவியுடன் ஆஸ்திரேலியாவிற்குச் சுற்றுலா சென்று கொண்டிருந்த ஜெஃப் கிட்சன் (Geoff Kitchen – 73) என்ற பிரிட்டிஷ் தாத்தா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், 100-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் ஊழியர்கள் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து, அந்த விமானம் அவசரமாகத் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் தரையிறக்கப்பட்டது.
படுகாயமடைந்தவர்களில் பலருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) முதுகெலும்பு முறிவு, மூளைக் காயம் போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைகளில் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன அதில், 31 வயதான தொலைத்தொடர்பு பொறியாளர் பிராட்லி ரிச்சர்ட்ஸ், தனக்கு ஏற்பட்ட பலத்த முதுகெலும்பு முறிவு மற்றும் தலைக்காயங்கள் காரணமாகத் தனது வாழ்வாதாரமும், தொழில் வாழ்க்கையும் முற்றிலும் கேள்விக்குறியாகி விட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
வானிலை தரவுகளின்படி, விமானம் அந்தப் பகுதியை அடைவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே அங்கு மோசமான புயல் மேகங்கள் உருவாவதை ரேடார் மூலம் கண்டறிந்திருக்க முடியும் என்றும், அவ்வாறு இருந்தும் ஏர்லைன்ஸ் நிறுவனம் உணவளிக்கும் சேவையை நிறுத்தாமலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யாமலும் அலட்சியமாகச் செயல்பட்டதாக வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்குச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏற்கனவே இடைக்கால நிதியுதவி வழங்கியிருந்தாலும், விமான நிறுவனத்தின் அப்பட்டமான அலட்சியத்தை நிரூபித்து சர்வதேச மாண்ட்ரியல் உடன்படிக்கையின் (Montreal Convention) உச்ச வரம்பைத் தாண்டி மில்லியன் கணக்கிலான பவுண்டுகளை இழப்பீடாகப் பெற பயணிகள் சட்டப்போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்






















