கனடாவில் பாடசாலைக்கு துப்பாக்கி, கத்தி எடுத்துச் சென்ற சிறுவன்
கனடா
கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புற பாடசாலைக்கு துப்பாக்கி மற்றும் கத்திகளுடன் வந்த பதின்ம வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேனிடோபா க்ருந்தல் (Grunthal) பகுதியில் உள்ள 'கிரீன் வேலி' (Green Valley) பாடசாலைக்கு ஆயுதங்களுடன் ஒரு சிறுவன் வருவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து பாடசாலை நிர்வாகம் உடனடியாக எச்சரிக்கப்பட்டது.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னரே, பாடசாலை வளாகத்திற்குள் அச்சிறுவனைக் கண்டறிந்த ஊழியர்கள், அவனிடம் இருந்த ஆயுதங்களை எவ்வித வன்முறையுமின்றி ஒப்படைக்கச் செய்தனர்.
6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயிலும் இந்த பாடசாலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக உடனடியாக முடக்கல் (Lockdown) நடைமுறைப்படுத்தப்பட்டது.
பொலிஸார் நடத்திய சோதனையில், அந்தச் சிறுவனிடமிருந்து தோட்டாக்கள் இல்லாத கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட மேகசின் , மேலதிக தோட்டாக்கள் மற்றும் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பே எமது முதன்மை முன்னுரிமை என ஹனோவர் பாடசாலைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சிறுவன் மீது ஆயுதங்களை வைத்திருத்தல் மற்றும் அச்சுறுத்தல் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அந்தச் சிறுவன் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.























