• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாடசாலை மாணவர்களின் நலனுக்காக பாடசாலை பல் சிகிச்சை நிலையம் திறந்துவைப்பு!

இலங்கை

பாடசாலை மாணவர்களின் பல் மற்றும் வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சாய்ந்தமருது மழ்ஹரூஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட பாடசாலை பல் சிகிச்சை நிலையம் நேற்று (22) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் எம்.சீ.நஸ்லின் றிப்கா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, நிலையத்தினை நாடாவெட்டித் திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம்.மாஹிர், பிராந்திய வாய் சுகாதாரப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் ஹபீப் முஹம்மட், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன், உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என்.எம்.இப்ஹாம், கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஏ.மலீக் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இதேவேளை இந்த நிகழ்வின் போது மேற்பார்வை பாடசாலை பல் சிகிச்சையாளர் ஜே.ஜனலோஜினி உட்பட பாடசாலை பல் சிகிச்சையாளர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

குறித்த நிலையத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களின் பல் சுகாதாரத்தினை மேம்படுத்துவதற்கான சகல செயற்பாடுகளும் பாடசாலை பல் சிகிச்சையாளரால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை பிராந்தியத்தில் மாணவர்களின் சுகாதார நலனை உறுதிப்படுத்தும் இத்திட்டம், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


 

Leave a Reply