போர் பதற்றங்களினால் விண்ணை முட்டும் விமான கட்டணங்கள்
இலங்கை
மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றங்களினால் உலகளவில் விமானக் கட்டணங்கள் விண்ணைத் தொட்டுள்ளன.
அதன்படி சாதாரண பொருளாதார வகுப்பு டிக்கெட்டுகளின் விலை கடந்த ஆண்டை விட சராசரியாக 24 சதவீதம் அதிகரித்துள்ளதாக 'டென்னியோ' நிறுவனத்தின் அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது. போரினால் வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளதால், விமானங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.
இதனால் எரிபொருள் செலவு அதிகரித்துள்ளது. ஒரு பீப்பாய் விமான எரிபொருள் விலை 90 அமெரிக்க டொலரிலிருந்து 200 டொலர் வரை அதிகரித்துள்ளது.
வளைகுடா நாடுகளின் விமானச் சேவைகள் முடங்கியுள்ளதால், நீண்ட தூரப் பயணங்களுக்கான விமான இருக்கைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலால் விமான நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவு அதிகரித்துள்ளது. ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசியா இடையிலான பயணங்களே மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று புதன்கிழமையுடன் முடிவடைய இருந்த தற்காலிகப் போர் நிறுத்தத்தை, ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்படும் வரை நீட்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.























