நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் இரண்டு மின் பிறப்பாக்கிகளின் பணி நிறுத்தம்
இலங்கை
பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய அனல் மின் நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகளின் பணிகள் தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக தேசிய மின் கட்டம் 600 மெகாவோட் உற்பத்தி திறனை இழந்துள்ளதாக CEB இன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது, நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தின் ஒரு மின் பிறப்பாக்கி மாத்திரமே செயல்பாட்டில் உள்ளது.
இது தேசிய மின் கட்டத்திற்கு 300 மெகாவோட் மின்சாரத்தை வழங்குகிறது.
வழக்கமான பராமரிப்பு காரணமாக லக்விஜய மின் நிலையத்தில் உள்ள மின் பிறப்பாக்கி ஒன்று நவம்பர் 3 ஆம் திகதி செயல்பாட்டில் இருந்து நீக்கப்பட்டதாகவும், தொழில்நுட்பக் கோளாறால் டிசம்பர் 20 ஆம் திகதி மற்றொரு மின் பிறப்பாக்கி மூடப்பட்டதாகவும் CEB தெரிவித்துள்ளது.
இரண்டு மின் பிறப்பாக்கிகளும் தற்போது பழுதுபார்க்கப்பட்டு வருகின்றன.
மேலும் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் இயக்கத்திற்குத் திட்டமிடப்பட்டுள்ளன.
எனினும், நீர் மின் உற்பத்தி வெற்றிகரமாகத் தொடர்வதால், தினசரி மின்சார விநியோகத்தில் எந்தத் தடங்கலும் ஏற்படவில்லை என்றும் CEB தெரிவித்துள்ளது.






















