• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இணையத்தில் பேசுபொருளான ரஜினி - இளையராஜாவின் குடி பற்றிய உரையாடல்

இலங்கை

திரை இசை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்ததையொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50' என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய இளையராஜா, "சில நாட்களுக்கு முன்பு சூப்பர்ஸ்டார் எனக்கு போன் செய்து நாம பண்ணதெல்லாம் மேடையில் சொல்லப்போகிறேன் என்று கூறினார். பெல்பாட்டம் பேண்ட் போட்டுக்கிட்டு நல்லா கிராப் முடி விட்டுட்டு கையில பட்டையா ஒரு வாட்ச் கட்டிக்கிட்டு... என்று கூறிய இளையராஜா ரஜினிகாந்திடம் சொல்லவா சொல்லவா... என்று கூறி மகேந்திரனும் நீங்களும் நானும் உக்காந்து குடிச்சோம்.

ஸ்டூடியோவில் வந்து என்னிடம் ரஜினி சொல்றாரு... நாம குடிச்சோம் நியாபமிருக்கா... நீங்க அரை பாட்டில் பீர் குடிச்சிட்டு ஆடின ஆட்டம் இருக்கே... அதை சொல்ல போறேன் என்றார். நீங்க என்னவேனாலும் சொல்லிக்கோங்க எனக்கு கவலையில்லை என்றேன்" என்று இளையராஜா தெரிவித்தார்.

இதைகேட்டு இருக்கையில் இருந்து எழுந்து இளையராஜா அருகில் வந்து பேசிய ரஜினி, "ஜானி படத்திற்கு இசையமைக்கும்போது நானும் மகேந்திரனும் குடிச்சோம், அப்போது இளையராஜாவிடம் குடிக்கிறீர்களா என்று கேட்டோம். அவரும் ஓகே சொல்ல... அப்போது அரை பாட்டில் பீர் குடிச்சிட்டு அவரு போட்ட ஆட்டம் இருக்கே... 3 மணி நைட் வரைக்கும்... ஊருல இருக்க கிசுகிசு எல்லாம் கேக்குறாரு... குறிப்பா கதாநாயகிகளை பத்தி... அண்ணே பெரிய காதலன்...அதான் இந்த பாட்டெல்லாம்... அப்படி இருந்தவரு... இன்னும் நிறைய இருக்கு... அடுத்தவாட்டி வைச்சிக்கிறேன்" என்று கூறிவிட்டு இருக்கையில் அமர்ந்தார். ரஜினி பேச்சால் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

இதனையடுத்து பேசிய இளையராஜா, "இல்லாததை எல்லாம் ரஜினி அடிச்சி விட்டு போறாரு" என்று கிண்டலடித்தார்.

மது அருந்தியதாக இளையராஜாவும் ரஜினியும் பேசிக்கொண்டது இணையத்தில் பேசுபொருளானது. இளையராஜாவின் சாதனைகள், சிம்பொனி இசை என பேச எவ்வளவோ விஷயங்கள் இருந்தும் குடிப்பழக்கம் பற்றி இளையராஜாவும் ரஜினியும் பேசியதே இணையத்தில் முக்கிய விவாத பொருளாக மாறியது.

இளையராஜாவுக்காக அரசு நடத்திய விழாவில் குடி பற்றிய உரையாடல் பேசுபொருளானது சர்ச்சையானது. இதனையடுத்து பலரும் ரஜினி மற்றும் இளையராஜா பேசிய 'குடி' பற்றிய உரையாடல் அந்த மேடையில் தேவையற்றது என்று இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Leave a Reply