• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புகழ்பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஸ்ரீவித்யா 

சினிமா

அம்மா எம்.எல்.வசந்தகுமாரி மிகப்பிரபலமான கர்நாடகப் பாடகி. அப்பா கிருஷ்ணமூர்த்தியும் பிரபலமான நடிகர்தான். 1953ல் ஸ்ரீவித்யா பிறந்தபோது உடல்நலக்குறைவு காரணமாக அவரது அப்பா நடிப்பதை நிறுத்தியிருந்தார். குடும்பம் கடுமையான பொருளாதாரச் சிக்கலில் இருந்தது. கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் ஒப்புக்கொண்டு மேடை மேடையாக பாடிக் கொண்டிருந்தார் அம்மா. “கைக்குழந்தையான எனக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூட நேரமில்லாமல் அம்மா குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருந்தார்” என்று பிற்பாடு ஒரு பேட்டியில் சொன்னார் ஸ்ரீவித்யா.
பெற்றோர் சூட்டிய பெயர் மீனாட்சிதான். ஆனால், இவர் பிறந்ததை கேள்விப்பட்ட சிருங்கேரி மடத்தின் தேத்தியூர் சுப்பிரமணிய சாஸ்திரிகள், ‘ஸ்ரீவித்யா’ என்று பெயரிட்டு அழைக்கும்படி கேட்டுக் கொண்டாராம். ஸ்ரீவித்யா உபாசகரான அவரது ஆசையை தவிர்க்கமுடியாமல் மீனாட்சி, ஸ்ரீவித்யா ஆனார்.
வித்யாவின் சிறுவயதின் போது குடும்ப பொருளாதாரம் காரணமாக பெற்றோருக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருந்தது. தாத்தா அய்யசாமி அய்யர்தான் வித்யாவுக்கு ஆறுதல். தினமும் சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து லஸ் கார்னரில் இருக்கும் தண்ணீர்த்துறை மார்க்கெட்டுக்கு தாத்தாவும், பேத்தியும் காய்கறி வாங்க ரிக்‌ஷாவில் வருவார்கள்.
இசைமேதையான தாத்தா ரிக்‌ஷா பயணத்தின் போது கீர்த்தனைகளை பாடியபடியே வருவாராம். பேத்திக்கு புரிகிறதோ இல்லையோ, தான் பாடிய பாடலின் ராகம், தாளம் பற்றியெல்லாம் சொல்லிக் கொடுப்பாராம். இதனால் ஐந்து வயதிலேயே ராகங்களை அடையாளம் கண்டுகொள்ளக் கூடிய திறமை ஸ்ரீவித்யாவுக்கு வாய்த்தது.

வித்யாவுக்கு பத்து வயதாக இருக்கும்போது, அவரது குரு டி.கிருஷ்ணமூர்த்தி, “இவள் கச்சேரி செய்யுமளவுக்கு கற்றுத் தேர்ந்துவிட்டாள்” என்று சான்று கொடுத்தார்.
ஆனால்-
ஸ்ரீவித்யாவுக்கு சங்கீதத்தைவிட நாட்டியத்தில்தான் குழந்தையாக இருந்ததிலிருந்தே ஆர்வம். பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் இந்தியாவிலேயே நாட்டியத்தில் புகழ்பெற்ற திருவாங்கூர் சகோதரிகள் அல்லவா? நாட்டியப் பேரொளி பத்மினியின் நாட்டியம் என்றால் ஸ்ரீவித்யாவுக்கு அவ்வளவு உயிர். அவர்தான் குரு தண்டாயுதபாணி பிள்ளையிடம் ஸ்ரீவித்யாவை சேர்த்து வைத்தவர். அவருக்கு ஆறு வயதாக இருந்தபோதே பத்மினி-ராகினி நடத்திய நாட்டிய நாடகத்தில் பாலசீதாவாக தோன்றினார். பதினோரு வயதில் அரங்கேற்றம்.
அத்தனை சிறுவயதிலேயே இந்தியா முழுக்க ஸ்ரீவித்யா நடனத்தில் பிரபலமானார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்திராகாந்தி, ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் மேடையேறினார்.
அம்மாவுக்கு சங்கீதம், மகளுக்கு நாட்டியம் என்றுதான் அனைவரும் நினைத்தார்கள். அப்படியிருக்கையில், அந்த மாலைப்பொழுது ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையையே மாற்றியது. பள்ளியில் இருந்து திரும்பியிருந்தார். வீட்டு வாசலிலேயே பரபரப்பாக காத்திருந்தார் பத்மினி.
“வித்யா, சீக்கிரம் ரெடி ஆகு. உனக்கு இன்னைக்கு மேக்கப் டெஸ்ட்”
“எதுக்குக்கா?”
“நீ சினிமாவில் நடிக்கப் போறே”
வித்யா அப்போதுதான் டீனேஜிலேயே நுழைந்திருந்தார். “வேணாம் அக்கா. எனக்கு டேன்ஸுதான் பிடிச்சிருக்கு”
“அடிப்பாவி. தமிழ்நாட்டுலே அத்தனைப் பொண்ணுங்களும் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்படுற எம்.ஜி.ஆரே கூப்பிட்டிருக்காரு. வேணாம்னு சொல்றீயே?”
“எம்.ஜி.ஆரா?” கிட்டத்தட்ட மயங்கிவிழப் போன வித்யாவை, பத்மினிதான் தாங்கிப் பிடித்தார். எம்.ஜி.ஆரின் பெயரை சொன்னபிறகும் மறுக்க முடியுமா என்ன. அந்த காலத்தில் அவரை யார்தான் ரசிக்காமல் இருந்திருக்க முடியும்?
பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய ‘ரகசிய போலிஸ் 115’ படத்துக்குதான் வித்யாவுக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. ஆனால் புடவையில் இவரைப் பார்த்த எம்.ஜி.ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை. “ரொம்ப சின்னப் பொண்ணா இருக்கு. இன்னும் கொஞ்சம் வளரட்டும். நானே வாய்ப்பு கொடுக்கறேன்” என்றார். ஸ்ரீவித்யா நடிக்க இருந்த வேடத்தில்தான் ஜெயலலிதா அந்த படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த மேக்கப் டெஸ்டெல்லாம் எடுப்பதற்கு முன்பாகவே ஏ.பி.நாகராஜன், வித்யாவின் அம்மாவிடம் இவரை நடிக்கவைக்க கேட்டுக் கொண்டுதான் இருந்தார். ஆனால், அப்போது எம்.எல்.வசந்தகுமாரிக்கும் சரி, வித்யாவுக்கும் சரி. நடிப்பைப் பற்றி ஐடியா எதுவுமில்லை. ‘ரகசியப் போலிஸ்’ விஷயத்தில் ஏமாற்றம் அடைந்திருந்த வித்யாவுக்கு இப்போது நடிப்பை ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்று வீம்பு ஏற்பட்டு விட்டது. ஏ.பி.என்.னுக்கு சம்மதம் தெரிவித்து செய்தி அனுப்பினார்கள்.
‘திருவருட்செல்வர்’ படத்தில் நடனம் ஆடினார் ஸ்ரீவித்யா. தொடர்ச்சியாக படங்களில் நடனமும், சிறிய வேடங்களும் கிடைத்தன. ‘காரைக்கால் அம்மையார்’ திரைப்படத்தில் கே.பி.சுந்தராம்பாள் பாடிய ‘தகதகதகதகவென ஆடவா’ பாடலுக்கு தகதகவென ஸ்ரீவித்யா ஆடியிருந்த வேகத்தில் தமிழ்நாடே அசந்துப் போனது.
மலையாளத்தில் ஸ்ரீவித்யா ‘சட்டம்பிக்காவலா’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். ஹீரோ சத்யனுக்கு வயது அப்போது ஐம்பத்து ஏழு. தன்னைவிட நாற்பது வயது மூத்த ஹீரோவுக்கு ஈடுகொடுத்து நடித்த இவரது துணிச்சல் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
தமிழில் பாலச்சந்தர் புயல் வீச ஆரம்பித்த காலம். அவரது ‘வெள்ளிவிழா’, ‘நூற்றுக்கு நூறு’ படங்களில் வித்யா தலை காட்டியிருந்தார். பாலச்சந்தரின் ஃபேவரைட் நடிகையாக மெதுவாக உருவாகத் தொடங்கினார். ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, கமலுக்கும், ஸ்ரீவித்யாவுக்கும் பெரிய பிரேக்காக அமைந்தது. நடனம் தெரிந்த ஸ்ரீவித்யாவின் பெரிய கண்கள் அவரது நடிப்புக்கு ப்ளஸ்பாயிண்ட்.
வித்தியாசத்துக்கு பெயர்போன பாலச்சந்தர், ஸ்ரீவித்யாவை ஒரு ட்ரீம்கேர்ளாக இல்லாமல் திறமையான நடிகையாக வளர்த்தெடுத்தார். இருபத்தி இரண்டு வயது ஸ்ரீவித்யா, இருபது வயது பெண்ணுக்கு அம்மாவாக ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் நடித்தபோது ஆச்சரியப்படாத ஆளே இல்லை. அந்த படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவித்யாவின் ‘பைரவி’ கேரக்டர், தமிழ் சினிமாவில் சாகாவரம் பெற்ற பாத்திரம். ரஜினிகாந்தின் முதல் ஜோடி ஆயிற்றே? படத்தில் ரஜினிகாந்துக்கு மனைவி, கமலுக்கு காதலி.
ரஜினி, கமல் மட்டுமல்ல. எழுபதுகளின் பிற்பாதியில் கோலோச்சிய தமிழ் சினிமாவின் அத்தனை ஹீரோக்களுடனும் ஸ்ரீவித்யா நடித்தார். தான் பிறப்பதற்கு முன்பே தமிழ் சினிமாவில் ஹீரோவாகிவிட்ட சிவாஜியுடனும் ‘நாம் இருவர்’, ‘நாங்கள்’, ‘நீதியின் நிழல்’ மாதிரி படங்களில் ஜோடி சேர்ந்தார்.
முதன்முதலாக வாய்ப்பு தர முன்வந்த எம்.ஜி.ஆரோடு மட்டும் ஜோடி சேரமுடியவில்லை. ஆனால், அதற்கு பரிகாரமாக எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனதுமே ஸ்ரீவித்யாவுக்கு ‘கலைமாமணி விருது’ கிடைத்தது. மட்டுமல்ல, 1977-78ஆம் ஆண்டின் சிறந்த நடிகையாக தமிழக அரசு விருதையும் பெற்றார்.

 

Leave a Reply