இரு நாடுகளும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.. இந்தியா-பாகிஸ்தானுக்கு ஐ.நா அறிவுரை
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரிதுள்ளன. இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்து அட்டாரி - வாகா எல்லையை மூடியது. பாகிஸ்தான் குடிமக்களுக்கான விசாக்களையும் இந்தியா ரத்து செய்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்து. சிம்லா ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது. மேலும் சிந்து நதி நீரைத் தடுப்பது போர் அறிவிப்பாகக் கருதப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் முப்படைகளையும் தயார் நிலையில் வைத்துள்ளது.
இந்நிலையில் பதற்றத்தை தணிக்க, இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) வலியுறுத்தியுள்ளது.
பதட்டமான சூழ்நிலை மேலும் மோசமடைவதைத் தடுக்க இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்தார்.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டிப்பதாக தெரிவித்த ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், நிலைமை மோசமடைவதைத் தடுக்க இரு நாடுகளும் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினைகளை பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்க்க முடியும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். இரு நாட்டு உறவும் மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நாங்கள் மிகவும் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.






















