சமூக ஊடகங்களில் போலி கடிதம் - பொலிஸார் எச்சரிக்கை
இலங்கை
காவல் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி கடிதம் குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆங்கிலத்தில் ‘CONVICTION’ என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கடிதத்தில், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் போலி கையொப்பமும், அரசாங்கம், உயர் நீதிமன்றம் மற்றும் காவல் துறையின் போலியான அதிகாரப்பூர்வ சின்னங்களும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குழப்பமான வார்த்தைகளைக் கொண்ட இந்தக் கடிதம், பொய்யான தகவல்களைக் கொண்டதாகவும், இலங்கையின் சைபர் கிரைம் தலைமையகம் கொழும்பில் அடையாளம் காணப்பட்ட ஒரு நிறுவனத்தால் வெளியிடப்பட்டதாகவும், அது தற்போது இல்லை என்றும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.
கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அல்லது உண்மைகள் காவல் துறையால் அறிவிக்கப்படவில்லை என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தவும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்துடனும் இந்தப் போலி கடிதம் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறிய பொலிஸார், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் பொலிஸாரின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.






















