மத அடிப்படைவாதத்தை எதிர்த்து நின்ற சீர்திருத்தவாதி.. யார் இந்த ஏழைகளின் போப்?
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் (திருத்தந்தை) பிரான்சிஸ் இன்று தனது 88 ஆவது வயதில் காலமானதாக வாடிகன் அறிவித்துள்ளது.
அர்ஜென்டினாவை சேர்ந்த போப் பிரான்சிஸ் உடைய இயற்பெயர் ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ. புவெனஸ் ஐரிஸ் நகரில் இத்தாலியைச் சேர்ந்த கணக்காளரான மரியோ ஜோஸ் பெர்கோக்லியோ மற்றும் இத்தாலிய குடியேறிகளின் மகள் ரெஜினா மரியா சிவோரி ஆகியோருக்கு ஐந்து குழந்தைகளில் மூத்தவராகப் ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ பிறந்தார்.
அரசுப் பள்ளியில் படிப்பை முடித்து, புவெனஸ் ஐரிஸ் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்ற இவர் வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் இயேசு சபையில் 1958இல் துறவு நிலை ஏற்றார். 1998 இல், புவெனஸ் ஐரிஸ் பேராயராகப் பொறுப்பேற்றார். 2001 இல் கார்டினலாக உயர்த்தப்பட்டார்.
2013, மார்ச் 13ஆம் நாள் கத்தோலிக்க திருச்சபையின் 266ஆம் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வழக்கத்துக்கு மாறாக அப்போதைய திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பதிவியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் பரபரப்பான சூழலில் திருத்தந்தை ஆன ஜார்ஜ் மேரியோ பெர்கோக்லியோ, போப் பிரான்சிஸ் ஆக தன்னை அடையாளப்படுத்தினார்.
சேரிகளின் போப்
ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்புக்காக பிரான்சிஸ் "சேரிகளின் போப்" என்ற புனைபெயரைப் பெற்றார்.
அர்ஜென்டினாவில் பேராயராக இருந்தபோதும், வாடிகனில் போப் ஆகவும் தனது ஊழியம் முழுவதும், அவர் தொடர்ந்து வறிய சமூகத்தினரிடையே கருணை செலுத்தினார். சமூக நீதிக்காகவும், புறக்கணிக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலமாக திருச்சபை இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.
சீர்திருத்தவாதி
பழமைவாதத்தின் பேரில் புலம்பெயர்ந்தோர், LGBTQ கத்தோலிக்கர்கள் மற்றும் திருச்சபையால் பெரும்பாலும் விலக்கப்பட்ட மக்களையும் ஏற்று போப் பிரான்சிஸ் கத்தோலிக்க பொது மனப்பான்மையில் சீர்திருத்தங்களைச் செய்தார்.
வாடிகன் நிதி மற்றும் கட்டமைப்புகளில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினார். முதலாளித்துவ அமைப்புகளை சவால் செய்தல், காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கையை ஆதரித்தல் மற்றும் விவாகரத்து மற்றும் ஒர் பாலின உறவு போன்ற பிரச்சினைகளில் அவர்களுக்கு சமூகத்திலும் மதத்திலும் கோட்பாட்டு ரீதியாக இருந்த புறக்கணிப்பை எதிர்த்தல் ஆகியவை பழமைவாதத்தை எதிர்த்து போப் பிரான்சிஸ் செய்த முக்கிய பணிகளாகும். மத அடிப்படைவாதத்தை பிளேக் நோய் என்று போப் பிரான்சிஸ் கூறினார்.
12 ஆண்டுகள் திருச்சபையை வழிநடத்தி, கல்லீரல் அழற்சி நோயுடன் போராடிய பிறகு, பிரான்சிஸ் இன்று (ஏப்ரல் 21) 88 வயதில் இறைவனடி சேர்ந்தார். தனது இறுதிச் சடங்கை எளிமையாக செய்ய வேண்டும் என்று போப் பிரான்சிஸ் முன்னரே தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பணியைத் குரலற்றவர்களுக்கான குரலாகவும், சீர்திருத்தவாதியாகவும், திருச்சபையின் பணியின் மையத்தில் ஏழைகளுக்கான நற்பணியை தொடர்ந்து முன்னிறுத்திய மேய்ப்பராகவும் போப் பிரான்சிஸ் உடைய என்றும் மரபு நிலைத்திருக்கும்.
ஏழைகளை விலக்கி வைக்கும் உலக பொருளாதார அமைப்பைக் கண்டிக்கும் பிரான்சிஸ், "நற்கருணை என்பது பலம் வாய்ந்தவர்களுக்கு ஒரு பரிசு அல்ல, ஆனால் பலவீனமானவர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த மருந்து" என்று கூறுவார்.
டைம் லைன்
2014 : பாலஸ்தீன மக்களின் கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் விதமாக, மேற்குக் கரை நகரமான பெத்லகேமிலிருந்து இஸ்ரேலைப் பிரிக்கும் சுவர் அருகே பிரார்த்தனை செய்தார்.
2015 : ஏழைகளைச் சுரண்டி பூமியை ஒரு பெரிய குப்பைக் குவியலாக மாற்றியுள்ள கட்டமைப்பு ரீதியாக வக்கிரமான உலகளாவிய பொருளாதார அமைப்பைச் சரிசெய்ய ஒரு கலாச்சாரப் புரட்சிக்கு அழைப்பு விடுத்து, "லாடாடோ சி" என்ற அறிக்கையை வெளியிடுகிறார்.
2015 : அமெரிக்காவைக் காலனித்துவ காலத்தில் கைப்பற்றியபோது, பொலிவியாவில் பழங்குடி மக்களுக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபை செய்த பாவங்கள் மற்றும் குற்றங்களுக்காக மன்னிப்பு கோருகிறது.
2015 : விவாகரத்து பெற விரும்பும் கத்தோலிக்கர்கள் தேவாலயத்தில் மறுமணம் செய்து கொள்ளும் வகையில், திருமண ரத்து செயல்முறை விரைவாகவும், எளிமையாகவும் மாற்றும் வகையில் மறுசீரமைக்கப்பட்டது.
2016 : அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் இறந்த புலம்பெயர்ந்தோருக்காகப் பிரார்த்தனை போப் பிரான்சிஸ் செய்கிறார். எல்லைச் சுவரைக் கட்ட விரும்பியதற்காக அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் "ஒரு கிறிஸ்தவர் அல்ல" என்று போப் தெரிவத்தார்.
2019: கத்தோலிக்கர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கூட்டு உறவுகளை ஏற்படுத்தி, அல் அசார் இமாமுடன் "மனித சகோதரத்துவம்" ஆவணத்தில் கையெழுத்திடுகிறார்.
2021: ஈராக்கிற்கு விஜயம் செய்த முதல் போப் ஆன பிரான்சிஸ், உயர்மட்ட ஷியா முஸ்லிம் மதகுருவை சந்தித்தார்.
2023: அசோசியேட்டட் பிரஸ் நேர்காணலில் "ஓரினச்சேர்க்கையாளராக இருப்பது குற்றமல்ல" என்று அறிவிக்கிறார்.
2023: ஒரே பாலின ஜோடிகளுக்கு ஆசீர்வாதங்களை அங்கீகரித்தார். இதனால் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் பிற இடங்களில் உள்ள பழமைவாத பிஷப்புகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பைத் சந்தித்தார்.
2025 ஏப்ரல் 20 (நேற்று) ஈஸ்டர் செய்தியாக, காசாவில் உடனடி போர் நிறுத்தம் வேண்டும் என்பதை தனது உரையில் வலியுறுத்தினார்.
























