• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முஸ்லிம் காங்கிரஸினால் மாத்திரமே முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும்

இலங்கை

”முஸ்லிம் காங்கிரஸினால் மாத்திரமே முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்  தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு மாநகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் நீர்கொழும்பு போருத்தொட்ட பிரதேசத்தில் நேற்று (16) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  இதன்போது ”ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் மாத்திரம் தான் முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும்  எனத் தெரிவித்த அவர்,   நீர்கொழும்பு மாநகர சபையில் முஸ்லிம் காங்கிரஸினால் மாத்திரம் தான் ஏழு முஸ்லிம் உறுப்பினர்களைப்பெற முடியும் எனவும்,  வட்டாரங்களை வென்றாலும் தோற்றாலும் பட்டியலிலாவது முஸ்லிம் உறுப்பினரைப்பெற சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும், வேறெந்தக்கட்சிக்கு வாக்களித்தாலும் முஸ்லிம் உறுப்புரிமையைப்பெற முடியாதென்பதை  அனைவரும் உணர்த்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ” குறுகிய காலத்தில் எமது நாட்டில் முஸ்லிம் சமூகம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கிறது எனவும்,  தற்போதுள்ள நிலைமையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளைத்தீர்ப்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனவும்,  கட்சி எப்போதும் மக்களுக்கு  ஒத்துழைப்பாகவும் உறுதுணையாகவும் இருக்கும் எனவும்,  நீர்கொழும்பு மாநகர சபையைக்கைப்பற்றி, மாநகர அதிகாரத்தைப் பெறுகின்ற சமூகமாக முஸ்லிம் சமூகம் மாற வேண்டுமென்றால் முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களிக்க வேண்டும் எனவும்,  அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும்  இதன் மூலம் மாநகர சபை, மாகாண சபை, பாராளுமன்றம் என்று மூன்று கட்ட அதிகாரங்களையும் பெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இம்முறை  அனைவரும் சிந்திந்து வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர் மற்ற கட்சியினருக்கு வாக்களித்து நமது பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்க துணை போக வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி றஹீம், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்கள், நீர்கொழும்பு மாநகர சபை வேட்பாளர்கள், ஊர்ப்பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply