• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நட்டத்தில் இயக்கும் இ.போ.ச.வின் 55 டிப்போக்கள்

இலங்கை

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) மொத்தம் 55 டிப்போக்கள் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், 54 இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் மட்டுமே செயல்பாடுகள் மூலம் இலாபம் ஈட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

நஷ்டத்தில் இயங்கும் 55 டிப்போக்களுக்கு பல புதிய நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது விளக்கினார்.

திறமையற்ற முகாமையாளர்களை திறமையான முகாமையாளராக மாற்றுதல், பேருந்து அட்டவணைகளை திருத்துதல், பேருந்து பயணங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், பயணிகளுக்கு கல்வி கற்பிப்பதன் மூலம் மோசடி நடவடிக்கைகளைக் குறைத்தல், ஊழியர்களை ஊக்குவிக்க ஊழியர்களின் சம்பளத்தை திருத்துதல், தொழிலாளர்களுக்கு பயிற்சி பட்டறைகளை ஏற்பாடு செய்தல், ஒவ்வொரு டிப்போவிற்கும் தினசரி இலக்குகளை நிர்ணயித்தல், பேருந்துகளில் எரிபொருள் நிர்வாகத்தை மேம்படுத்துதல், விநியோகங்களின் தரத்தை தொடர்ந்து ஆய்வு செய்தல், டிப்போ செலவுகளைக் கட்டுப்படுத்த தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குதல், எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட மாதாந்திர நிதிக் கணக்குகளை மதிப்பாய்வு செய்தல் மற்றும் டிப்போக்களில் கூடுதல் வருமானம் ஈட்டும் செயல்பாடுகளை ஆராய்தல் ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.

இலங்கை போக்குவரத்து சபையில் 7,137 பேருந்துகள் உள்ளன, ஆனால் அவற்றில் 5,182 மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளன என்று அமைச்சர் மேலும் கூறினார்.

அதன்படி, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 1,955 பேருந்துகள் தற்போது சேவையில் இல்லை.

இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது மொத்தம் 25,384 பேர் பணிபுரிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 

Leave a Reply