
கொழும்பு, ராஜகிரியவில் பாரிய தீ விபத்து
இலங்கை
கொழும்பு, ராஜகிரியவில் அமைந்துள்ள ஒரு பொழுதுபோக்கு இடத்தில் இன்று (06) அதிகாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தினால் குறித்த பகுதியில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தை அடுத்து, கோட்டை மாநகர சபையினால் 05 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதுடன், தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை வெற்றிகரமாக அணைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீப்பரவலானது தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த அனர்த்தத்தினால் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை, எனினும், தீ விபத்து காரணமாக நிகழ்வு அரங்கில் பலத்த சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.