
பிணை கிடைக்கப் பெற்ற சாமர சம்பத்திற்கு மீண்டும் விளக்கமறியல்
இலங்கை
மூன்று வழக்குகள் தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு, இரண்டு வழக்குகளில் பிணை கிடைக்கப்பெற்ற போதிலும், மற்றொரு வழக்கிற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, சாமர சம்பத் தசநாயக்கவை ஏப்ரல் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை முன்னதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணை கிடைக்கப்பற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அவரின் வழக்குகள் தொடர்பில் தெரியவருவதாவது:
இரண்டு அரச வங்கிகளில் இருந்து இரண்டரை மில்லியன் ரூபா நிதியை ஊவா மாகாண சபைக்காக பெற்றுக்கொண்டு அந்த நிதியை தனது சாமர சம்பத் தசநாயக்க என்ற நிதியத்தின் கணக்கில் வைப்பீடு செய்தது
மற்றுமொரு வங்கியிடம் ஊவா மாகாண சபைக்காக பெறப்பட்ட ஒரு மில்லியன் ரூபாவை முதலமைச்சராக இருந்த சாமர சம்பத் தசநாயக்கவே வங்கிக்கிளையில் நேரடியாகவே பெற்றுக்கொண்டது
மற்றுது அரச வங்கியொன்றில் தனிப்பட்ட நிதியை கோரியபோது அதனை வழங்க மறுத்த வங்கி முகாமையாளருடன் முரண்பட்டுக்கொண்டு அந்த வங்கியில் ஊவா மாகாண சபை பேணி வந்த பல்வேறு நிலையான வங்கிக்கணக்குகளை நீக்கிக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 23 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியமையாகும்.