
17.5 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கனேடிய யுவதி கைது
இலங்கை
17.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் 20 வயது கனேடிய பெண் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்று இரவு (9) விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர், இளங்கலை மாணவி என்றும் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவென்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர் நேற்று இரவு 8.35 மணிக்கு எதிஹாட் ஏர்வேஸ் விமானம் EY-396 மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைவதற்கு முன்பு கனடாவின் டொராண்டோவிலிருந்து அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
சோதனையில், சுங்க அதிகாரிகள் அவரது பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 17 கிலோகிராம் 573 கிராம் ஹஷிஷ் போதைப்பொருளை கண்டுபிடித்தனர்.
சந்தேக நபர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன், மேலதிக விசாரணைக்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.