ஆட்சியமைக்கும் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி - ஜேர்மன் அமைச்சர் எச்சரிக்கை
ஜேர்மன் மாகாணமொன்றில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு புலம்பெயர்தல் எதிர்ப்பு தீவிர வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி வெற்றிபெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அது தொடர்பில் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சரான போரிஸ் பிஸ்டோரியஸ்.
ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில், செப்டம்பர் மாதம் மாகாணத் தேர்தல் நடைபெற உள்ளது.
அங்கு புலம்பெயர்தல் எதிர்ப்பு தீவிர வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி, அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜேர்மன் ஃபெடரல் அமைப்பின்படி, மாகாண அரசுகளுக்கு பொலிஸ் துறை, உளவுத்துறை உட்பட பல முக்கிய துறைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆக, புலம்பெயர்தல் எதிர்ப்பு மற்றும் தீவிர வலதுசாரிக் கொள்கைகள் கொண்ட AfD கட்சி அரசு அமைக்குமானால், அவை உளவுத்துறை முதலான தகவல்களைப் பெற முயற்சிக்கலாம்.
அது நாட்டுக்கு பாதுகாப்பானதாக அமையுமா என்பது உறுதியாக தெரியாத நிலையில், அப்படிப்பட்ட முக்கிய, ரகசிய தகவல்களை அணுக அக்கட்சி சார்ந்த மாகாணத் தலைவர்களுக்கு அனுமதியளிக்கலாமா என்பது குறித்து ஆராய்ந்துவருவதாக ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சரான போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார்.
அதாவது, AfD கட்சியினரில் பலர் ரஷ்ய ஜனாதிபதியான புடினுக்கு நெருக்கமானவர்கள் என்பது அவர்கள் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அப்படியிருக்கும்போது, அவர்களை நம்பி உளவுத்துறை முதலான முக்கிய தகவல்களை பகிர்வது நாட்டுக்கு பாதுகாப்பல்ல என்பதாலேயே அது குறித்து ஆராய்ந்துவருவதாக ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சரான போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.























