தகவல் தொடர்பு கோளாறு - ஜெர்மனியில் நாடு முழுக்க ரெயில்வே சேவை முடங்கியது
தகவல் தொடர்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, செவ்வாய்க்கிழமை மாலை நாடு முழுவதும் ரெயில் சேவைகளை நிறுத்தியதாக ஜெர்மனியின் தேசிய ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரெயில்வே நெட்வொர்க்கில் தகவல் தொடர்புகளுக்கு பயன்படுத்தப்படும் GSM-R டிஜிட்டல் தகவல் தொடர்பு அமைப்பில் நாடு தழுவிய அளவில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அனைத்து ரெயில்களும் நிலையங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக 'டாய்ச் பான்' (Deutsche Bahn) நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்ட ஒரு குறுகிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த கோளாறுக்கான காரணம் குறித்த உடனடித் தகவல் எதுவும் வெளியாகவில்லை. "கோளாறை சரிசெய்ய எங்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்" என்று 'டாய்ச் பான்' நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்றோ அல்லது எத்தனை ரெயில்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றோ அந்நிறுவனம் குறிப்பிடவில்லை.
"பயணிகள் இறங்கும் வகையில் ரெயில்களை நிலையங்களுக்கு கொண்டுவர நாங்கள் இப்போது முயற்சித்து வருகிறோம். அதன்பிறகு, இன்னும் அறியப்படாத அந்த கோளாறை நாங்கள் சரிசெய்ய வேண்டும்" என்று 'டாய்ச் பான்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எவ்லின் பாலா கூறியதாக 'பில்ட்' (Bild) செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.























