மங்காத்தா மாதிரி 100 மடங்கு - தல - தளபதி நட்பு குறித்து பகிர்ந்த வெங்கட் பிரபு
சினிமா
நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், நடிகர்கள் அஜித், விஜய் நட்பு குறித்து சமீபத்திய நேர்காணலில் இயக்குநர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
அந்த நேர்காணலில், "மங்காத்தா படம் பண்ணும்போதே அடுத்து விஜய வச்சு படம் பண்ணு நல்லா இருக்கும்'னு அஜித் சார் சொன்னாரு. கோட் படம் பத்தி சொன்னதும், என்னய்யா எத்தனை வருஷமா நான் சொல்லிட்டு இருக்கேன். சூப்பர் அருமையா பண்ணுனு சொன்னாரு. படம் ஆரம்பிக்கும் போதே மங்காத்தா மாதிரி 100 மடங்கு இருக்கணும்டா, அப்படி பண்ணுனு சொன்னார். அஜித் சார் சொன்ன மாதிரியே செய்துள்ளேன். மக்கள்தான் எத்தனை மடங்குன்னு சொல்லனும். நிச்சயமாக விஜய் சாரின் சினிமா பயணத்திற்கு பேர்வெல் மாதிரி இந்த படம் இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "அஜித் சார் மருத்துவமனையில் இருந்தபோது, நான் அவரை சந்திக்கச் சென்றேன். அப்போது விஜய் சார் போன் செய்து அஜித் சாரிடம் கொடுக்க சொன்னார். அப்போது அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசினார்கள். அப்போது அவர்களுக்கு இடையே இருந்த அன்பை நான் பார்த்தேன்" என்று தெரிவித்தார்.
விரைவில் வெளியாகவுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் சிறப்பாக வந்துள்ளதால் நடிகர் விஜய் மகிழ்ச்சியாக உள்ளார் என்றும், தனது படம் ரிலீசாவதற்கு முன்பு விஜய் அப்படத்தை பற்றி பெரிதாக பேசி நான் பார்த்தது இல்லை என்று விஜயின் நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளது படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.