மனைவி உட்பட 42 பெண்களை கொன்ற பயங்கரம் - கென்யாவின் சீரியல் கொலையாளி கைது
கென்யாவில் 42 பெண்களை கொன்ற சீரியல் கொலையாளி காலின்ஸ் ஜுமைசி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கென்யாவின் தலைநகர் நைரோபியில்(Nairobi) உள்ள கைவிடப்பட்ட கிரவல் குவாரியில் பல உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 33 வயதான காலின்ஸ் ஜுமைசி(Collins Jumaisi) என்ற சந்தேக நபரை கென்ய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஜுமைசி கடந்த இரண்டு ஆண்டுகளில் தனது மனைவி உட்பட 42 பெண்களை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஜுமைசியின் வீட்டில் இருந்து, அடையாள அட்டைகள், செல்போன்கள், ரப்பர் கையுறைகள், சாக்குகள், குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கருவிகள் உள்ளிட்ட சாத்திய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஜுமைசியின் குற்றச்சாட்டுகள் பொதுமக்களிடையே பீதியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
சிலர் இந்த உடல்கள் கடந்த கால போராட்டங்களின் போது காணாமல் போனவர்களுடன் தொடர்புடையவை என்று அஞ்சுகின்றனர். ஆனால், காவல்துறை இந்த உடல்களுக்கும் போராட்டங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளது.
தற்போது அதிகாரிகள் இறந்தவர்களை அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர்.