TamilsGuide

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற 1,740 கிலோ பருப்பு தீயிட்டு அழிப்பு - வர்த்தகருக்கு அபராதம்

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற, வண்டுகள் மற்றும் பூச்சிகள் நிறைந்த 1,740 கிலோ கிராம் மஞ்சள் பருப்பை மண்ணெண்ணெய் ஊற்றி முழுமையாக அழிக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹட்டன் – கொட்டகலை நகரில் உள்ள மொத்த வியாபாரக் கடை ஒன்றில் கொட்டகலை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் இந்த பருப்புத் தொகுதி அண்மையில் கைப்பற்றப்பட்டது.

பின்னர், அவை இன்று (09) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதவானின் உத்தரவுக்கு இணங்க, கைப்பற்றப்பட்ட பருப்புத் தொகுதி தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் திடக்கழிவு மறுசுழற்சி மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் பருப்பின் மீது மண்ணெண்ணெய் தெளிக்கப்பட்டு, அது முழுமையாக அழிக்கப்பட்டது.

இந்த பருப்புத் தொகுதியின் உரிமையாளரான வர்த்தகர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, அவருக்கு 2,000 ரூபாய் அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.

கைப்பற்றப்பட்ட இந்த பருப்புத் தொகுதியின் தற்போதைய சந்தை மதிப்பு 5,22,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொட்டகலை சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கொட்டகலை நகரில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, வர்த்தகக் களஞ்சியம் ஒன்றில் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இப்பருப்புத் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டு, அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment