TamilsGuide

பஸ் கட்டண அமைப்பில் குழப்பம்

முன்மொழியப்பட்டுள்ள வருடாந்த பஸ் கட்டணத் திருத்தம் ஒரு முரண்பாடானது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கட்டணங்களைக் கட்டுப்படுத்துவதை அரசாங்கம் வேண்டுமென்றே தவிர்த்துள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் 10,000 க்கும் மேற்பட்ட குறுகிய தூர சேவை பஸ்களும், சுமார் 3,000 நீண்ட தூர சேவை பஸ்களும் இயக்கப்படுவதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், இந்த இரண்டு சேவைகளுக்கும் இரண்டு வெவ்வேறு கட்டண முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாவார்கள் என கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல், எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் குறைந்தால், குறுகிய தூர சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள 12 சதவீத கட்டணத் திருத்தத்திற்கு என்ன நடக்கும் என்ற கேள்வி எழுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, டீசல் விலை குறைந்தாலும் எதிர்காலத்தில் குறுகிய தூர சேவை பஸ் கட்டணங்களை குறைக்க முடியாமல் போகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வருடாந்த பஸ் கட்டணத் திருத்தத்தின் போது, நீண்ட தூர சேவைகளுக்காக 20 சதவீத கட்டண உயர்வை வழங்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த கெமுனு விஜேரத்ன, இதன் காரணமாக எதிர்காலத்தில் பஸ் கைத்தொழில் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என வலியுறுத்தியுள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள பஸ் கட்டணத் திருத்தம் இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment