TamilsGuide

தந்தை அயதுல்லா காமேனி இறுதிச்சடங்கில் உச்ச தலைவர் மொஜ்தபா கலந்துகொள்ள வாய்ப்பில்லை - ஈரான்

ஈரான் முன்னால் உச்சதலைவர் அயதுல்லா அலி காமேனி இறுதிச் சடங்கில் அவரது மகனும் தற்போதைய ஈரான் உச்ச தலைவருமான மொஜ்தபா காமேனி கலந்துகொள்ள மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடத்திய திடீர் தாக்குதலில் அலி காமேனி கொல்லப்பட்டார்.

தொடர்ந்து அமெரிக்கா - ஈரான் போர் வெடித்த நிலையில் கடந்த வாரம் ஏற்பட்ட புரிந்துணர்வு மூலம் தற்காலிக முடிவை எட்டியுள்ளது.

இந்நிலையில் சுமார் 4 மாதங்களுக்கு பிறகு மறைந்த தலைவர் அயதுல்லா அலி காமேனிக்கு பிரமாண்ட இறுதிச் சடங்கு நடத்த ஈரான் தயாராகி வருகிறது.

ஜூலை 4, தெஹ்ரானில் இறுதிச்சடங்கு தொடங்க உள்ள நிலையில் உலக நாடுகள் பலவற்றுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 8 வரை முக்கிய நகரங்களில் பிரம்மாண்டமாக ஊர்வலம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இறுதியாக ஜூலை 9 அன்று அவரது சொந்த ஊரான மஷ்ஹாரில் உள்ள இமாம் ரெசா நினைவிடத்தில் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்திய அரசின் சார்பில் இதில் பீகார் ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் உளவுத்துறை எச்சரிக்கைகள் காரணமாக இந்த இறுதிச்சடங்கில் மொஜ்தபா காமேனி நேரில் பங்கேற்க வாய்ப்பில்லை என இந்தியாவில் உள்ள ஈரானிய உச்சத் தலைவரின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதி அயதுல்லா ஹக்கீம் இலாஹி தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் பேசி இலாஹி,

"புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி, தனது தந்தையின் இறுதிச்சடங்கில் நேரில் கலந்துகொண்டு மக்களைச் சந்திக்கவும், அவர்களோடு இணைந்து துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளவும் பெரிதும் விரும்புகிறார்.

ஆனால், தற்போதைய அசாதாரணச் சூழலில் அவருக்குப் பாதுகாப்பு வழங்குவது மிகக் கடினமானது மற்றும் ஆபத்தானது எனப் பாதுகாப்பு படையினர் கருதுகின்றனர்.

எனவே, பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு அவர் இந்த இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்கக் கூடாது எனப் பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தியுள்ளனர்." என தெரிவித்துள்ளார்.

மொஜ்தபா கமேனி நாட்டின் புதிய உச்சத் தலைவராக அறிவிக்கப்பட்ட போதிலும், பிப்ரவரி இறுதிக்குப் பிறகு இதுவரை ஒருமுறை கூட பொதுவெளியிலோ அல்லது வீடியோவிலோ தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment