TamilsGuide

பணம் கொடுத்து அதிதியாக செல்லும் கலாசாரத்தை அனுமதிக்கக் கூடாது

குருமண்வெளி விபுலம் அமைப்பினால் நடத்தப்படும் மட்டக்களப்பு – அம்பாறை பிரிமியர் லீக் 2026 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளின் உத்தியோகபூர்வ சீருடைகள் நேற்று, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களினால் அவரது அலுவலகத்தில் வைத்து அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள் தெரிவிக்கையில்,

‘நாட்டின் பல மாவட்டங்களில் பணபலத்தை பயன்படுத்தி தேர்தல்களில் வெற்றிபெறும் கலாசாரம் காணப்பட்டாலும் மட்டக்களப்பில் அவ்வாறான நிலை நீண்ட காலமாக இருக்கவில்லை. ஆனால் அண்மைக்காலமாக மட்டக்களப்பில் முன்னெப்போதும் இல்லாத ஒரு புதிய கலாசாரம் உருவாகி வருகிறது. அதாவது நிகழ்வுகளில் அதிதியாக கலந்துகொள்வதற்காக பணம் பெற்றுக்கொண்டு செல்லும் நடைமுறையை சில அரசியல்வாதிகள் உருவாக்கியுள்ளனர். இவ்வாறான தவறான கலாசாரத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இடமளிக்கக் கூடாது’ எனத் தெரிவித்தார்.

மேலும் குருமண்வெளி விபுலம் அமைப்பினால் நடத்தப்படும் மட்டக்களப்பு – அம்பாறை பிரிமியர் லீக் 2026 கிரிக்கெட் தொடர் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் போட்டி ஏற்பாட்டாளர்கள், அணிகளின் உரிமையாளர்கள், தக்கவைக்கப்பட்ட வீரர்கள் அனுசரணையாளர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
 

Leave a comment

Comment