TamilsGuide

யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் திருத்தந்தை 14ஆம் லியோவினால் நேற்றைய தினம் (29) நியமிக்கப்பட்டுள்ளார்.

1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் 2000ஆம் ஆண்டு கொழும்பு மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு பல இடங்களிலும் சமய, கல்வி மற்றும் நிர்வாகப்பணியாற்றியுள்ளதுடன் உரோமில் இறையியல் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டத்தையும் கொழும்பில் கல்வியியல் டிப்ளோமாவையும் ஐக்கிய இராச்சியத்தில் கல்வியியலில் முதுகலைப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமானி, கலைமானி பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து 2020ஆம் ஆண்டு ஆடி மாதம் 13ஆம் திகதி அப்போதைய திருத்தந்தை பிரான்சிஸால், கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராக நியமிக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 29ஆம் திகதி ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டதுடன் 2024ஆம் ஆண்டு ஆவணி 19ஆம் திகதி மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகராகவும் நியமனம் பெற்று பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில், தற்போதைய ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசத்தின் ஓய்வு காரணமாக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராக பணியாற்றி வந்த பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் யாழ். மறைமாவட்ட ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

Leave a comment

Comment