TamilsGuide

நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்ற பாடலின் வரிகளை உண்மை ஆக்கிய  நாள் 

தமிழக வரலாற்றில் 49-ஆண்டுகளுக்கு முன் 1977 இதே ஜூன் 30-ஆம் தேதி #அதிமுக எனும் இயக்கம் முதன் முதலாக அரியணையில் ஏறியது..

'நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்' என்ற பாடலின் வரிகளை உண்மை ஆக்கி தமிழ்நாடு முதலமைச்சராக #பொன்மனச்செம்மல் #புரட்சித்தலைவர் அவர்கள் பதவியேற்ற நாள் இன்று.

அன்று அதிகாலை 6 மணி முதலே தமிழகம் மற்றும் இன்றி எங்கெல்லாம் எம்ஜிஆர் இதயங்கள் இருந்தனவோ அவை யாவும் சென்னை மவுண்ட் சாலை அண்ணா சிலை அருகில் கடல் போல குவிய துவங்கினர்.

1968 ஆம் வருடம் தலைவர் தம் சொந்த செலவில் நிறுவி திறந்துவைத்த அதே #அண்ணா சிலையை சுற்றி இருந்த வாலாஜா சாலை, காசினோ அரங்க சாலை ,எல்லிஸ் சாலை எங்கு நோக்கினும் மக்கள் வெள்ளம்.

தலைவர் முதல்வர் பொறுப்பை ஏற்று கொண்ட ராஜாஜி அரங்கின் முன் கேட்கவே வேண்டாம்...அப்படி ஒரு எழுச்சி காணப்பட்டது.

சரியாக 8.30 மணி அளவில் தலைவர் தன் அமைச்சரவை உறுப்பினர்கள் உடன் அங்கே வந்தார்... அன்று ஆளுநராக இருந்த பிரபுதாஸ் பட்வாரி அவர்கள் 9.15 மணிக்கு வர அங்கே பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் முடிய..._அங்கிருந்து அன்புத்தலைவர் அண்ணா சிலை அருகில் அமைக்கபட்டு இருந்த மேடைக்கு தலைவர் வந்து மேடை ஏற முடியாத அளவு மக்கள் வெள்ளம்.

துள்ளி குதித்து மேடை ஏறிய தலைவர் முகத்தில் ஆயிரம் கதிரவங்கள் சேர்ந்தது போல அவ்வளவு மகிழ்ச்சி....
மேடையை சுற்றி நகர்ந்து அவர் வெற்றி சின்னம் இரு இலை காட்டி கும்பிட்ட போது எழுந்த கரவொலி கடல் அலைகளை தாண்டி ஒலித்தது.

தலைவர் பேச துவங்கிய போதும் பெரும் ஆரவாரம் விண்ணை பிளந்தது....தலைவர் தன் உரையில்..

"அங்கே ராஜாஜி அரங்கில் நாங்கள் எடுத்து கொண்ட பதவி பிரமாணம் அது ஒரு சம்பிரதாய சடங்கு....இங்கே என்னை இந்த தகுதிக்கு ஆளாக்கிய உங்கள் முன் நாங்கள் இந்த பொறுப்பை ஏற்று கொள்வதே உண்மை நிகழ்ச்சி.

'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்று சொல்லிய அமரர் அண்ணா முன்பு சொல்கிறேன்.. நீங்கள் இடும் கட்டளையை எதிர்நோக்கி கடமை ஆற்ற நாங்கள் காத்து இருக்கிறோம்.

ஒரு முக்கிய செய்தி..அமரர் அண்ணா அவர்களின் வழியில் லஞ்சம் ஊழல் குடும்ப தலையீடு இல்லாத மக்கள் ஆட்சியை நிச்சயம் நாங்கள் தருவோம்..

'உழைப்பவரே உயர்ந்தவர்' என்ற நிலையை என்றும் காப்பேன்... எத்தனை எதிர்ப்புகள் எந்த ரூபத்தில் வந்தாலும் அவற்றை எல்லாம் உங்கள் பேராதரவுடன் முறியடிப்போம். எங்களுக்கு நல்ஆசி வழங்குங்கள்"

- என்று அவர் கேட்டுக்கொள்ள பொங்குமான்கடல் போல மீண்டும் ஆரவாரம் தெறிக்க.. அங்கு இருந்து புறப்பட்ட அவர் கோட்டைக்கு சென்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்...

சாதாரண படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு போதும் தெரியாது, இப்படி ஒரு நாள் வரும், நம் தலைவர் இப்படி ஒரு நிலைக்கு வருவார் என்று. இனி எம்ஜிஆர் சினிமாவுக்கு வரமாட்டார் எம்ஜிஆர் புது படங்கள் வராது என்ற வருத்தம் இருந்தாலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகிவிட்டார் என்கிற ஒரு மகிழ்ச்சியுடன் இருந்தனர்

அன்று அந்த கூட்டம் அண்ணா சிலையில் இருந்து கலைந்து செல்ல பல மணி நேரங்கள் ஆனது.. தமிழகம் அன்று புது வரலாறு படைத்தது..

(முதல்வராக பொறுப்பு ஏற்கும் முன் அண்ணா அவர்களின் துணைவியார் ராணி அம்மாள் மற்றும் அண்ணன் சக்கரபாணி மற்றும் ஐயா எம்.கே.ராதா அவர்களிடம் காலில் விழுந்து ஆசிகள் வாங்கி நிகழ்வுக்கு புறப்பட்டார்...)

தொகுப்பு: நன்றி திரு.நெல்லை மணி |
 

Leave a comment

Comment