கட்டுநாயக்கவில் 1.32 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன தொழிலதிபர் கைது
இலங்கை
சுமார் ஒரு கோடியே 32 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளைச் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கடத்தி வர முயன்ற சீன நாட்டு தொழிலதிபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (21) அதிகாலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பயணி சுங்கப் பிரகடனம் செய்வதற்கு ஏதுமில்லாத பயணிகளுக்கான ‘பசுமைப் பாதை’ ஊடாக, தந்திரோபாயமான முறையில் இந்த சிகரெட் தொகையைக் கடத்திச் செல்ல முயன்ற போதே கச்சிதமாகப் பிடிபட்டுள்ளார்.
சீனாவைச் சேர்ந்த இந்தத் தொழிலதிபர் முதலில் சீனாவிலிருந்து தாய்லாந்தின் பேங்காக் நகருக்குச் சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து ‘தாய் ஏர்வேஸ்’ விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் அவரது பயணப் பொதிகளை நவீன ஸ்கேனர் இயந்திரங்கள் மூலம் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
அதிகாரிகள் நடத்திய இந்த அதிரடிச் சோதனையின் போது, அவர் கொண்டு வந்த பொதிகளுக்குள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சீன தயாரிப்பான 88,000 சிகரெட்டுகள் அடங்கிய 440 சிகரெட் கார்டன்கள் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு முழுமையாகப் பறிமுதல் செய்யப்பட்டன.
இலங்கைக்குள் வெளிநாட்டுச் சிகரெட்டுகளைக் கொண்டு வருவதற்குச் சட்டப்படி கடுமையான தடைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள பின்னணியில், வரி ஏய்ப்புச் செய்து அதிக இலாபம் ஈட்டும் நோக்கிலேயே இந்த கடத்தல் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகச் சுங்கத் துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சீன நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரைச் சுங்க அதிகாரிகள் தங்களது காவலில் வைத்துத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தி வருவதுடன், இந்த கடத்தலின் பின்னணியில் உள்ளூர் ஏஜெண்டுகள் எவருக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.























