TamilsGuide

ஊருக்கு போக காசு இல்லாததால் சினிமாவுக்கு வந்த பாக்கியராஜ்!.. இப்படி ஒரு பிளாஷ்பேக்கா!..

தமிழ் திரையுலகில் திரைக்கதை மன்னன் என அழைக்கப்படுபவர் கே.பாக்கியராஜ். கோவையை சேர்ந்த இவர் சென்னைக்கு வந்தது இயக்குனராகும் ஆசையில் இல்லை. எம்.ஜி.ஆர், சிவாஜி போல ஒரு நடிகராக வேண்டும் என்பதுதான் அவரின் ஆசையாக இருந்தது. ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

சினிமாவில் ஹீரோவாக முயற்சி செய்பவர்கள் எல்லாம் அழகாக இருந்தனர். நானோ ஒல்லியான உடம்பு, சோடாப்புட்டி கண்ணாடி என வேறுமாதிரி இருந்தேன். ஒருநாள் கண்ணாடி முன்பு யோசித்தபோதுதான் இது எனக்கு புரிந்தது. ஹீரோவாக முடியாது. எனவே, எனக்கு என்ன வரும் என யோசித்தேன். கதை கொஞ்சம் எழுத வரும். எனவே, கதாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக ஆவது என முடிவெடுத்தேன். நீங்கள் என்னவாக வேண்டும் என முடிவு செய்யாமல் உங்களால் அதை அடைய முடியாது என சொல்லி இருக்கிறார் பாக்கியராஜ்.

80களில் கலக்கி வந்த பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தார். கதை விவாதம், காட்சி அமைப்பு, வசனம் என எல்லாவற்றிலும் பாரதிராஜாவுக்கு பேருதவியாக பாக்கியராஜ் இருந்தார். ஒருமுறை படப்பிடிப்பில் எல்லாவற்றையும் தயார் செய்து வைத்திருந்தார் பாக்கியராஜ். ஆனால், சம்பளம் கொடுக்காத கோபத்தில் லைட் மேன் ஒருவர் பீஸ் கேரியரை பிடுங்கி கொண்டு போய்விட்டார்.

இது பாக்கியராஜுக்கு தெரியாது. படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பாரதிராஜாவிடம் ‘எல்லாவற்றையும் ரெடி பண்ணி வைத்துவிட்டேன்’ என சொல்ல கோபத்தில் அவரை கண்டபடி திட்டிவிட்டார் பாரதிராஜா. ‘நாம் எல்லாவற்றையும் சரியாக செய்தும் நம்மை இப்படி திட்டிவிட்டாரே’ என நினைத்த பாக்கியராஜ் ‘உங்களிடம் இப்படி திட்டு வாங்கிக்கொண்டு வேலை செய்ய வேண்டும் என எனக்கு அவசியம் இல்லை’ என ஒரு பேப்பரில் எழுதி வைத்துவிட்டு நடந்தே தனது அறைக்கு போய்விட்டார். மேலும், இனிமேல் சினிமா வேண்டாம். ஊருக்கு போய்விடலாம் எனவும் முடிவெடுத்தார்.

ஆனால், ஊருக்கு போக தன்னிடம் காசு இல்லை என்பதே அப்போதுதான் அவருக்கு புரிந்தது. அன்று மாலை படப்பிடிப்பு முடிந்து மற்ற உதவி இயக்குனர்கள் அவரின் அறைக்கு வந்தனர். பாக்கியராஜின் முடிவை கேட்ட அவர்கள் ‘ஊருக்கெல்லாம் போகாதே.. நீ போய்விட்டதை நினைத்து டைரக்டர் மிகவும் வருத்தப்பட்டார்’ என அவரை சமாதானம் செய்து அடுத்த நாள் படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வந்தனர்.

பாரதிராஜாவை பார்த்ததும் ‘குட்மார்னிங் சார்’ என சொல்ல, அவரோ ‘எனக்கு ஏன்டா குட்மார்னிங் சொல்ற.. உன்னை திட்ட எனக்கு என்ன உரிமை இருக்கு?’ என சொல்ல பாக்கியராஜ் கண்கலங்கி விட்டார். அதன்பின் அவர் பாரதிராஜாவை விட்டு விலகவே இல்லை. அன்று மட்டும் அவரிடம் காசு இருந்திருந்தால் ஊருக்கு போயிருப்பார். பாரதிராஜாவை மீண்டும் சந்திக்காமல் போயிருக்க கூட வாய்ப்பு இருக்கிறது. சில சமயம் வறுமை கூட சிலருக்கு நல்லதை செய்யும் என்பதை இந்த சம்பவம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

Kalimuthu Raj
 

Leave a comment

Comment