யுரேனியம் செறிவூட்டலை விட்டுக்கொடுக்க ஈரான் ஒப்புதல்
யுரேனியம் செறிவூட்டலை விட்டுக்கொடுக்க ஈரான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பெப்ரவரி 28ஆம் திகதியில் தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தியது. இதனிடையே, உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்களிக்கும் ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியதால், எண்ணெய் விநியோகமும் பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஈரானுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வந்தது. இருப்பினும், ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் முன்மொழிவுகள் ஏற்கக்கூடியதாக இல்லை எனக்கூறி, அமெரிக்காவின் முன்மொழிவை ஈரான் மறுத்துள்ளது.
குறிப்பாக, அமெரிக்காவின் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய முன்மொழிவான யுரேனியம் செறிவூட்டலை விட்டுக்கொடுக்க ஈரான் மறுத்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஈரான் ஒத்துழைக்காவிட்டால், மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.
இதனிடையே, இவ்விரு நாடுகளுக்கிடையேயும் மத்தியஸ்தம் செய்வதில் பாகிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டுவந்த நிலையில், யுரேனியம் செறிவூட்டலை விட்டுக்கொடுக்க ஈரான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இரு நாடுகளும் விரைவில் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.























