TamilsGuide

விஜய் பதவியேற்பு விழாவில் மரபு மீறல் - வெடித்தது முதல் சர்ச்சை

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிகழ்வில், அரசு விழாக்களில் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபு மாற்றப்பட்டது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

பொதுவாகத் தமிழக அரசு விழாக்கள் மற்றும் பதவியேற்பு நிகழ்வுகளில், 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடலுடன் விழா தொடங்கப்பட்டு, இறுதியில்தான் தேசிய கீதம் பாடப்படும் என்பது எழுதப்படாத விதியாகும்.

ஆனால், இன்றைய விழாவில் முதன்முதலாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது; இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட்டது; இறுதியாகவே தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

தமிழக அரசியல் வரலாற்றில், தேசிய கீதத்திற்குப் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது இதுவே முதன்முறை என்பதால் இது திட்டமிட்ட மாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக அரசின் அரசாணைப்படி, அரசு விழாக்களின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்பது சட்டபூர்வமான விதியாகும்.

மரபை மாற்றியது மாநில உரிமைகளை மீறும் செயல்

"தமிழக அரசின் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் விழாத் தொடக்கத்தில் 'நீராரும் கடலுடுத்த' எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்" என்ற மரபை மாற்றியது மாநில உரிமைகளை மீறும் செயல் எனத் தமிழ் ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.

விழாவின் இறுதியிலும் மீண்டும் வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்ட விதம், தமிழகத்தின் தனித்துவமான அடையாளத்தைச் சிதைக்கும் முயற்சியோ எனப் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். 
 

Leave a comment

Comment