2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டொரொண்டோவில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் ஆய்வு மாநாடு 2026 தொடர்பான ஊடக சந்திப்பு 06 May 2026- CTCC Business Centre இல் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு அறிஞர்கள் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஊடகத்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மாநாட்டின் நோக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
“செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” என்ற தலைப்பில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் ஆய்வு மாநாடு 2026, அக்டோபர் 15 முதல் 18 வரை கனடாவின் டொரொண்டோ நகரில் நடைபெறவுள்ளது. உலகின் பல பகுதிகளிலிருந்து தமிழ் அறிஞர்கள் ஆய்வாளர்கள் கல்வியாளர்கள் மற்றும் சமூக முன்னோடிகள் கலந்து கொண்டு தமிழ் மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு, பொருளாதாரம் மற்றும் செய்யறிவு தொழில்நுட்ப வளர்ச்சி ஆகிய துறைகளில் ஆய்வுகளையும் கருத்தரங்குகளையும் முன்னெடுக்க உள்ளனர்.
ஊடக சந்திப்பின் போது மாநாட்டின் முக்கிய அம்சங்கள் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பு நடைமுறைகள் உலகத் தமிழர் பங்களிப்பு மற்றும் இளம் தலைமுறையினரின் ஈடுபாட்டின் அவசியம் ஆகியவை விரிவாக விளக்கப்பட்டன. மேலும் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்படும் ஆய்வாளர்களுக்கு இருவழி விமானச் செலவும் தங்குமிட வசதியும் வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மாநாட்டிற்கான ஆய்வுச் சுருக்கங்களை மே 25, 2026 க்குள் சமர்ப்பிக்கலாம் என்றும் அனைத்து கட்டுரைகளும் நிபுணர் குழுவினரால் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும் தகவல்களுக்கு: www.GlobalTamilConference.org
ஊடக தொடர்புகள்:
மாநாட்டு செயலாளர் அலுவலகம்
மின்னஞ்சல்: communication@tamilfederation.org


