அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதி பாரக் ஒபாமா, கனேடிய சிந்தனைக் குழுவான 'கனடா 2020' அமைப்பின் சிறப்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இன்று டொரண்டோவிற்கு விஜயம் செய்துள்ளார்.
டொரண்டோவில் உள்ள ஃபேர்மாண்ட் ரோயல் யார்க் ஹோட்டலில் நடைபெறும் இந்த அமைப்பின் காலா நிகழ்வில் அவர் முதன்மை உரையை ஆற்றவுள்ளார்.
நீதியான, உள்ளடக்கிய மற்றும் எதிர்காலச் சிந்தனை கொண்ட கனடாவை உருவாக்குவதற்கான கொள்கை முன்னெடுப்புகளை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்வு, ஊடகங்களுக்கு அனுமதி இல்லாத ஒரு தனிப்பட்ட நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாரக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மூன்று முறை உத்தியோகபூர்வமாக கனடாவிற்கு விஜயம் செய்திருந்தார்.
2009 ஆம் ஆண்டு முதல்முறையாக ஒட்டாவாவிற்கு வருகை தந்து அப்போதைய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரைச் சந்தித்த அவர், பின்னர் G8, G20 உச்சிமாநாடுகள் மற்றும் வட அமெரிக்கத் தலைவர்களின் உச்சிமாநாடுகளிலும் கலந்துகொண்டார்.
டொரண்டோ நகரிற்கு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


