TamilsGuide

கனடாவில் நூதன முறையில் கடத்தப்பட்ட 250 கிலோ கொக்கெய்ன் மீட்பு - மூவர் கைது

கனடாவின் ஹாலிஃபாக்ஸ் துறைமுகத்தில், டொமினிகன் குடியரசிலிருந்து வந்த கப்பல் கொள்கலன் ஒன்றிலிருந்து சுமார் 248.7 கிலோகிராம் நிறையுடைய கொக்கெய்ன் போதைப்பொருளை கனடா எல்லைப் பாதுகாப்பு முகமை (CBSA) அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த மார்ச் 3ஆம் திகதி எக்ஸ்-ரே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிகாரிகள் நடத்திய சோதனையில், கொள்கலனுக்குள் இருந்த 1,178 பொதிகள் கண்டறியப்பட்டன.

இந்த போதைப்பொருள் பொதிகள் அனைத்தும் கார்பன் காகிதங்களால் சுற்றப்பட்டு, தட்டையான ரொட்டிகளுக்குள் (Flatbread) மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்தது.

இந்த பாரிய கடத்தல் விவகாரம் தொடர்பாக மொன்றியலைச் சேர்ந்த 58 வயதுடைய பீட்டர் பொம்பியோ என்பவர் இறக்குமதியாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவருக்கு உதவியாகச் செயற்பட்ட ஒன்டாரியோவைச் சேர்ந்த டெய்லர் பிக்ஸ்பி மற்றும் சக்கரி டேனியல் அர்டிசி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலினால் முன்னெடுக்கப்பட்ட இந்த கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட மூவர் மீதும் போதைப்பொருள் இறக்குமதி மற்றும் கடத்தல் சதி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் மூவரும் வரும் மே 13ஆம் திகதி ஒன்டாரியோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். 

Leave a comment

Comment