TamilsGuide

மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி – 2026

சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும், மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பிலும் திருகோணமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின் தலைமையில் இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இத்தகைய நிகழ்வுகள் மிகவும் வரவேற்கத்தக்கவை எனவும், இவ்வாறான வாய்ப்புகள் அடிக்கடி கிடைப்பதில்லை எனவும் குறிப்பிட்டார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் இவ்வாய்ப்புகளை பயனுள்ளதாக பயன்படுத்தி தேசிய மட்டத்தில் தங்களது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் சமூக சேவைகள் திணைக்களத்தின் வகைப்படுத்தல்களுக்கு அமைவாக மாற்றுத்திறனாளிகள் பிரிக்கப்பட்டு, அவர்களுக்கேற்ற வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டன.

போட்டிகளில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற போட்டியாளர்களுக்கு மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களால் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

மேலும், பிரதேச செயலகப் பிரிவுகளில் கடமையாற்றும் சமூக சேவைகள் உத்தியோகத்தர்களும், முதியோர் சேவைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள இணைப்பாளர் த. பிரணவன் மற்றும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் உமா சுதன் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
 

Leave a comment

Comment