நாவற்குடா தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மாணவர்கள் படுகாயம்
இலங்கை
மட்டக்களப்பு – கல்முனை பழைய வீதியில், நாவற்குடா தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
நாவற்குடாவின் உட்புற வீதியொன்றில் அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கட்டிடமொன்றின் சுவரில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
காயமடைந்த இரு மாணவர்களும் முதலில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் இருந்தமையே அவர்கள் பலத்த காயமடையக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






















