TamilsGuide

மட்டக்களப்பில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக பேராட்டம்

பயங்கரவாத தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் புதியதாக முன்வைக்கப்படும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் (PSTA) ஆகியவற்றின் அடக்குமுறை அம்சங்களுக்கு எதிராக இன்று மட்டக்களப்பில் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநகர உள்ளூராட்சி உறுப்பினர்கள் கட்சி அங்கத்தவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கண்டனப் போராட்டமானது மட்டக்களப்பு  கல்லடிப் பாலத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு காந்திப் பூங்கா வரை எதிர்ப்புப் போராட்டமானது சென்றடைந்தது.

இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் கூறுகையில்,

இந்த நாட்டின் ஜனநாயக அடித்தளத்தையும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதிக்கும் வகையில் அதுவும் குறிப்பாக தமிழருக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட வரலாறு கொண்ட PTA சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். 

அதேபோல், புதிய பெயரில் அதே அடக்குமுறை சட்டத்தை கொண்டு வர முயற்சிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

தமிழ் மக்களின் உரிமைகள், நீதிமுறை பாதுகாப்பு, மற்றும் சட்டத்தின் முன் சமத்துவம் உறுதிசெய்யப்பட வேண்டிய அவசியத்தை இந்த போராட்டம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 

மாணவர்கள், இளைஞர்கள், சிவில் சமூக அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தங்கள் ஜனநாயக குரலை வெளிப்படுத்தியமை பாராட்டத்தக்கது.

நீதியுடனும் மனித உரிமைகளுடனும் ஒத்திசைவான சட்டங்களே இந்த நாட்டிற்கு தேவையாகும். அடக்குமுறை சட்டங்கள் அல்ல – என்றார்.
 

Leave a comment

Comment