கலெக்டர் அனுமதி கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் 24/10/1972 ல் எம்.ஜி.ஆர் நடத்தும் முதல் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும், அவர் ஆரம்பிக்கும் கட்சிக்கு தம் ஆதரவை அளிக்கவேண்டும் என முடிவு செய்த மக்கள் காலை 8 மணிமுதல் தேரடி திடலில் கூட ஆரம்பித்து விட்டார்கள்.
அப்போதெல்லாம் அவ்வளவு பஸ் வசதி கிடையாது. எனவே சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களெல்லாம் கட்டுச்சோற்றை கட்டிக்கொண்டு கால்நடையாகவும், மாட்டு வண்டியிலும், குதிரை வண்டியிலும் வந்து மக்கள் தேரடியில் இடம் பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். 2 கிலோமீட்டர் தூரத்திற்கு மக்கள் வெள்ளம் மதியமே அலை மோதியது. இனிமேல் அவ்வளவு கூட்டத்தை கலைக்கவும் முடியாது. கலைத்தாலும் நிலைமை விபரீதமாகிவிடும் என்று மேலிடத்திற்கு தெரிவித்துவிட்டு கலெக்டர் கூட்டத்திற்கு ஒருவழியாக அன்று மதியம் அனுமதி அளித்துவிட்டார். நிலைமை இவ்வாறிருக்க தோட்டத்திலோ எம்.ஜி.ஆருக்கு கடும் காய்ச்சல். மருத்துவர்கள் எம்.ஜி.ஆரை எங்கும் வெளியில் செல்லவேண்டாம் என்று தடுத்துவிட்டனர். ஜானகி அம்மாவும் அருகிலிருந்து எம்.ஜி.ஆரை கவனித்துக் கொண்டார்.
நேரமோ சென்று கொண்டிருந்தது.
கூட்டத்திற்கு போகும்வழியில் எம்.ஜி.ஆரை தீர்த்துக்கட்ட ஒரு கூட்டமும், அவர் முகத்தில் திராவகத்தை வீச ஒரு கூட்டமும் தயாராக இருப்பதாக எம்.ஜி.ஆர் வீட்டிற்கு தகவல் கிடைத்தது. இடையே வானொலியில் எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரியில்லாததால் பொதுக்கூட்டம் ரத்து என்ற செய்தியும் வர மக்கள் கொதித்து போயினர். பலர் ரகளையில் ஈடுபட்டனர்.
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த மன்றத்தலைவர் பாலாஜி, சென்னையை நோக்கி காரில் புறப்பட்டார். வழியில் காரை மறித்து பலர் என்னைய்யா! வாத்தியார் வராரா? இல்லையா? என்று துளைத்தெடுத்தனர். கண்டிப்பாக வருவார் என்று சொல்லிவிட்டு தோட்டத்திற்கு சென்றார் பாலாஜி.
அங்கு சென்ற பாலாஜி அதிர்ச்சியடைந்தார். ஒருபக்கம் எம்.ஜி.ஆருக்கு கடும் காய்ச்சல். மறுபுறம் அவரை கொல்ல காத்திருக்கும் கூட்டம். கவலை அடைந்த ஜானகி அம்மையாரோ, தலைவரை அழைத்துச் செல்லக்கூடாது என்று பாலாஜியிடம் வாதம் செய்தார்.
உடனே பாலாஜி, தலைவரே! நீங்கள் மட்டும் இன்று கூட்டத்திற்கு வரவில்லையென்றால் அந்த மாமரத்திலே தூக்கு போட்டுக் கொள்வேன் என்று கையைக்காட்ட, எம்.ஜி.ஆர் மருத்துவர்கள், ஜானகி அம்மையாரையும் சமாதானப்படுத்தி விட்டு காரில் ஏறிவிட்டார். கார் பலவழியில் சுற்றி வந்து காஞ்சிபுரம் வந்தடைந்தது. ஏற்கெனவே திட்டமிட்டபடி எம்.ஜி.ஆரை வயல்வெளி வழியே 1/2 கி.மீ தூரம் கூட்டி வந்தனர். மேடையின் பின்புறம் இருந்த பள்ளிவாசல் காம்பவுண்ட் கேட் வழியே எம்.ஜி.ஆர் வந்து திடீரென மேடையில் தோன்றியதும் மக்கள் ஆரவாரத்திற்கு அளவேயில்லை. மக்களின் எழுச்சியையும் சந்தோஷத்தையும் பார்த்த எம்.ஜி.ஆர், பாலாஜியையே கூட்டத்திற்கு தலைமையேற்க செய்தார். கட்சி ஆரம்பித்து ஒருவாரமே ஆகியிருந்த நிலையில் எம்.ஜி.ஆர் கருப்பு சிவப்பு கரைவேட்டியையே கட்டியிருந்தார். தோளில் கருப்பு சிவப்பு பார்டரில் துண்டும் இருந்தது. பக்கத்து கட்டிடத்தில் திராவகம் வீச காத்திருந்த கும்பல், இவ்வளவு பரபரப்பான கூட்டத்தில் திராவகத்தை எம்.ஜி.ஆர் மீது வீசிவிட்டு தப்புவது எளிதல்ல என்று முடிவு செய்து இடத்தை காலி செய்தனர்.
தலைவர் மீது மக்கள் கருப்பு மற்றும் சிவப்பு துண்டுகளை கீழேயிருந்து வீசினர். அனைத்தையும் லாவகமாக பிடித்த எம்.ஜி.ஆரின் ஸ்டைலையும் வேகத்தையும் பார்த்த மக்களின் கைதட்டலும், விசில் சத்தமும் விண்ணை பிளந்தது.
இது திமுக கூட்டமா அல்லது அண்ணா திமுக கூட்டமா என வியக்குமளவிற்கு மேடையில் கருப்பு சிவப்பு துண்டுகள் குவிந்து கிடந்தது. அப்போதே திமுக என்றால் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் இல்லாத திமுக இல்லை என ஆட்சியாளர்களுக்கு உரைத்தது. இந்த ஆரவார சந்தோஷத்தில் தலைவரின் காய்ச்சல் பறந்தோடியது. மாறாக தலைவரின் வளர்ச்சியை பிடிக்காத அப்போதைய தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கு காய்ச்சல் தொற்றிக் கொண்டது.
எவ்வித குறிப்புமின்றி, எம்ஜிஆர் " எனது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே! என ஆரம்பித்து, நான் கணக்கு கேட்டது தவறா? என்ற கேள்வியுடன் திமுக வளர்ச்சிக்கு தன்னுடைய பங்கு, என சுமார் இரண்டு மணி நேரம் (இரவு 10 மணிமுதல் 12 மணிவரை) பேசிவிட்டு சென்றார். மறுநாள் அனைத்து தினசரிகளிலும், எம்.ஜி.ஆர் தலைப்பு செய்தி ஆனார்.
வாழ்க! பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் புகழ்.
VR S Selvendhiran


